ஷா ஆலம், செப் 4- சிறு மற்றும் நடுத்தர தொழில் துறைகளோடு உற்பத்தி, சில்லரை வர்த்தகம் மற்றும் சேவைத் துறையைச் சேர்ந்த தொழில்முனைவோர் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் அதிக பங்களிப்பை அதாவது 70 விழுக்காட்டை வழங்குவதாக தொழில்முனைவோர் மேம்பாட்டுத் துறைக்கான ஆட்சிக்குழு உறுப்பினர் ரோட்சியா இஸ்மாயில் கூறினார்.
இதனைக் கருத்தில் கொண்டு தொழில்முனைவோரியல் சார்ந்த திட்டங்களுக்கு மாநில அரசு அதிக முக்கியத்துவம் வழங்குவதாக அவர் சொன்னார்.
நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 24.8 விழுக்காட்டு பங்களிப்பை சிலாங்கூர் வழங்குவதாக மந்திரி பெசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி முன்னதாக கூறியிருந்தார். அதில் 78.2 விழுக்காடு சேவைத் துறை, சிறு மற்றும் குறு தொழில்துறைகள் மூலம் பெறப்படுகின்றன ரோட்சியா தெரிவித்தார்.
மொத்த உள்நாட்டு உற்பத்தியில் இந்த அளவு பங்களிப்பை வழங்குவதற்குரிய சாத்தியத்தை நடப்பு ஒருங்கமைப்பும் சூழியல் முறையும் நமக்கு ஏற்படுத்தியுள்ளன என்றார் அவர்.
இங்குள்ள ஷா ஆலம் மாநாட்டு மையத்தில் நேற்று நடைபெற்ற சிலாங்கூர் தொழில்முனைவோர் கண்காட்சியின் தொடக்க நிகழ்வில் உரையாற்றிய போது அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
குறு மற்றும் முறைசாரா தொழில்முனைவோர் உள்பட எஸ்.எம்.ஐ. எனப்படும் சிறு மற்றும் நடுத்தர தொழில்துறையினர் தங்கள் வர்த்தகத்தை மேம்படுத்துவதற்கும் விரிவாக்கம் செய்வதற்கும் தேவையான நடவடிக்கைகளை மாநில அரசு எடுத்து வருவதாகவும் அவர் தெரிவித்தார்.
சிலாங்கூர் அனைத்துலக வர்த்தக உச்ச நிலை மாநாடு உள்பட பல்வேறு கண்காட்சிகளில் தொழில்முனைவோர் பங்கேற்பதற்குரிய தளத்தை ஏற்படுத்தித் தருவதும் இதில் அடங்கும் என அவர் சொன்னார்.