கோம்பாக், செப் 15- உலு கிள்ளான், கம்போங் கெமேன்சேவில் இன்று காலை நடைபெற்ற ஏசான் ராக்யாட் மலிவு விற்பனைத் திட்டத்தில் ஒரு மணி நேரத்தில் 300 கோழிகள் விற்றுத் தீர்ந்தன.
சந்தையைவிட மிக குறைவாக அதாவது 10.00 வெள்ளி விலையில் விற்கப்பட்ட காரணத்தால் இவ்வட்டார மக்களிடையே கோழிக்கு அமோக வரவேற்பு இருந்தது.
மாநில மக்களிடையே அடிப்படை உணவுப் பொருள்களுக்கு நல்ல வரவேற்பு கிடைத்து வருவதாக சிலாங்கூர் மாநில விவசாய மேம்பாட்டுக் கழகத்தின் (பி.கே.பி.எஸ்.) தலைமை செயல்முறை அதிகாரி டாக்டர் முகமது கைரில் முகமது ராஸி கூறினார்.
இந்த மலிவு விற்பனை நடைபெறும் பல இடங்களில் அத்தியாவசிய உணவுப் பொருள்கள் விரைவாக விற்றுத் தீர்ந்து விட்டதால் கூடுதலாக பொருள்களை அனுப்பும்படி கோரிக்கை விடுக்கப்பட்டு வருவதாக அவர் சொன்னார்.
இம்மாதம் 6 ஆம் தேதி தொடங்கி செவ்வாய் முதல் ஞாயிற்றுக்கிழமை வரை ஒவ்வொரு நாளும் ஒன்பது இடங்களில் இந்த மலிவு விற்பனை நடைபெறுவதாகவும் அவர் குறிப்பிட்டார்.
இன்றைய நிகழ்வின் போது மலிவு விலையில் பொருள்களை வாங்குவதற்காக பொது மக்கள் காலை 8.00 மணி முதல் காத்திருக்கத் தொடங்கினர்.