ஷா ஆலம், செப் 18- ஜெலாஜா ஏசான் ராக்யாட் மலிவு விற்பனைத் திட்டத்தின் மூலம் கடந்த செப்டம்பர் 6ஆம் தேதி தொடங்கி இதுவரை ஒவ்வொரு இடத்திலும் சராசரி 20,000 வெள்ளி வருவாய் ஈட்டப்பட்டதன் மூலம் நிர்ணயிக்கப்பட்ட வருமான இலக்கு எட்டப்பட்டுள்ளது.
ஆறு அத்தியாவசிய உணவுப் பொருட்களை மட்டுமே விற்பனை செய்த போதிலும் இந்தத் திட்டம் குடியிருப்பாளர்களிடமிருந்து நல்ல வரவேற்பை பெற்றுள்ளதாக .சிலாங்கூர் விவசாய வளர்ச்சிக் கழகத்தின் (பி.கே.பி.எஸ்.) தலைமை நிர்வாக அதிகாரி கூறினார். நாங்கள் ஆறு பொருட்களை மட்டுமே கொண்டு வந்தாலும், மொத்த விற்பனை 10 லட்சம் வெள்ளியைத் தாண்டிவிட்டது. இத்திட்டம் மூலம் பொதுமக்களுக்கு கிடைத்த உதவித் தொகையின் மதிப்பு 545,000 வெள்ளியாகும்.
இதுவரை, இந்த விற்பனை பயணத் தொடர் நிர்ணயிக்கப்பட்ட இலக்கை எட்டியுள்ளது. ஒவ்வொரு இடத்திலும் 20,000 வெள்ளி வருமானம் ஈட்டப்பட்டது என்று டாக்டர் முகமட் கைரில் முகமட் ராஸி சிலாங்கூர் கினியிடம் கூறினார். இங்குள்ள பத்துகேவ்ஸ் பொது மைதானத்தில் நடைபெற்ற பத்துகேவ்ஸ் சட்டமன்ற நிலையிலான மலிவு விற்பனைத் திட்டத்தின் போது அவர் இதனைக் குறிப்பிட்டார் .
இந்த மலிவு விற்பனைத் திட்டம் சீராக நடைபெறுவதற்கு ஏதுவாக திங்கட்கிழமை தவிர ஒவ்வொரு நாளும் அனைத்து பி.கே.பி.எஸ். ஊழியர்களும் இந்த விற்பனையில் ஈடுபடுத்தப்படுவதாக அவர் தெரிவித்தார். தோட்டங்களில் வேலை செய்வோர் தவிர்த்து எங்கள் தலைமையகத்தில் மட்டும் 300 ஊழியர்கள் உள்ளனர்.
மக்கள் நலனுக்காக நாங்கள் அனைவரும் ஒன்றாக இதில் ஈடுபடுகிறோம் என்றார் அவர். மக்களுக்கும் மாநில அரசுக்கும் சேவை செய்ய பி கே.பி.எஸ். தயாராக உள்ளது. அதை முடிந்தவரை சிறப்பாக செய்ய முயற்சிப்போம் என அவர் மேலும் சொன்னார்.