ECONOMY

மலாக்காவின் 22 பகுதிகளில்  திடீர் வெள்ளம்- இரு நிவாரண மையங்கள் திறப்பு

மலாக்கா, செப் 19-  மாநிலத்தில் நேற்று பெய்த கனமழையைத் தொடர்ந்து  அலோர் காஜாவில் திடீர் வெள்ளம் ஏற்பட்டது. இதனால் பாதிக்கப்பட்ட ஒன்பது குடும்பங்களைச் சேர்ந்த மொத்தம் 29 பேர் இரண்டு வெள்ள நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

பாதிக்கப்பட்டவர்கள் அலோர் காஜா மாவட்டத்தில் உள்ள கம்போங் புக்கிட் தம்புன் மற்றும் கம்போங் புக்கிட் பாலாய் ஆகிய பகுதிகளைச் சேர்ந்தவர்கள் என்று மலாக்கா சிவில் தற்காப்புப் படை  ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.

பாலாய் ராயா புக்கிட் பாலாய் மற்றும் பாலாய் ராயா புக்கிட் தம்புன் ஆகிய இரண்டு மையங்களும் நேற்று மதியம்  1.00  மணி முதல் திறக்கப்பட்டன.
மாலை 4.00 மணி நிலவரப்படி மூன்று மாவட்டங்களில் 22 பகுதிகள் இன்னும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளன என்று சிவில் தற்காப்பு படையின் செய்தித் தொடர்பாளர் கூறினார்.

மலாக்கா தெங்கா மாவட்டத்தில் பெங்காலான்  பந்தாய், புக்கிட் பாயான், புக்கிட் பெருவாங் உத்தாமா, தாமான் டேசா துயோங், செமபோக் தாலாம், கம்போங் சோலோக் புக்கிட் பாரு டுயோங், ஜம்பத்தான் டுயோங், பெர்மாத்தாங் டுயோங், டுயோங் தெங்கா, புக்கிட் டுயோங் ஆகிய பகுதிகள் பாதிக்கப்பட்டுள்ளன.

ஜாசினில், கம்போங் கிலாங் பெராப்பி, கம்போங் மெர்லிமாவ் பாசிர், பெசிசிர் சுங்கை மெர்லிமாவ், தாமான் மெர்லிமாவ் மெகா, தாமான் ஸ்ரீ மெர்லிமாவ், கம்போங் பாயா லெங்காங் மற்றும் கம்போங் ஸ்ரீ தஞ்சோங் ஆகியவையும் பாதிக்கப்பட்ட பகுதிகளாகும்.

எனினும், இவ்விரு இடங்களிலும் தற்காலிக நிவாரண மையங்கள் திறக்கப்படவில்லை.


Pengarang :