ECONOMYHEALTHSELANGOR

மருந்துகளை விநியோகிக்க மின்சாரக் கார்கள்- பர்மாநியாகா அறிமுகப்படுத்துகிறது

குவாந்தான், செப் 27- கிள்ளான் பள்ளத்தாக்கிலுள்ள பல்வேறு பகுதிகளில் மருந்துகளை விநியோகம் செய்யும் பணிக்கு மின்சார வாகனங்களை பயன்படுத்தும் நடவடிக்கையை பர்மாநியாகா பெர்ஹாட் நிறுவனம் தனது துணை நிறுவனமான பர்மாநியாகா லோஜிஸ்டிக்ஸ் மூலம் மேற்கொள்ளவுள்ளது.

ஆயுதப்படை வாரியத்தின் 50ஆம் ஆண்டு நிறைவையொட்டி இங்குள்ள ஆகாயப்படைத் தளத்தில் நடைபெற்ற நிகழ்வில் தற்காப்பு படைகளின் தளபதி டான்ஸ்ரீ அப்பாண்டி புவாங் இந்த மின்சாரக் கார்களை அறிமுகப்படுத்தினார்.

இரு மின்சார வாகனங்கள் மூலம் மருந்துகளை சுகாதார மையங்கள் மற்றும் அரசாங்க மருத்துவமனைகளுக்கு அனுப்பும் பணி வரும் அக்டோபர் முதல் மேற்கொள்ளப்படும்.

பசுமைஇல்ல வாயு வெளியேற்றத்தை குறைப்பதற்கான தங்கள் நிறுவனத்தின் நீடித்த திட்டத்தின் ஒரு பகுதியாக இந்த மின்சாரக் வாகன பயன்பாடு அமைவதாக பர்மாநியாகாக பெர்ஹாட் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் டத்தோ ஜூல்கர்னாய்ன் முகமது யூசோப் கூறினார்.

“2040 குறைந்த கார்பன் அபிலாஷை” முன்னெடுப்பின் கீழ் கார்பன் உமிழ்வைக் குறைக்கும் அரசாங்கத்தின் கோரிக்கையின் ஒரு பகுதியாகவும் இந்நடவடிக்கை அமைகிறது என்று அவர் தெரிவித்தார்.

மின்சாரக் கார்களின் பயன்பாட்டை அடுத்த மூன்று ஆண்டுகளில் 30 விழுக்காடாகவும் வரும் 2028 இல் 60 விழுக்காடாகவும் உயர்த்த தாங்கள் இலக்கு கொண்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.


Pengarang :