கோலாலம்பூர், அக் 2– சூப்பர் லீக் போட்டியில் நெகிரி செம்பிலானை 5-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தியதன் வழி ஒன்பதாவது முறையாக தொடர்ச்சியாக சூப்பர் லீக் கிண்ண வெற்றியாளர் என்ற பெருமையை ஜோகூர் டாருள் தாக்ஸிம் (ஜே.டி.டி.) குழு பெற்றுள்ளது.
இதன் வழி ஜோகூர் குழு சூப்பர் லீக் போட்டியின் வரலாற்றில் புதிய அத்தியாயத்தை படைத்துள்ளதோடு பிற குழுக்களால் இனியும் தொட முடியாத சாதனையைப் புரிந்துள்ளது.
நேற்றிரவு ஜோகூர் பாரு, சுல்தான் இப்ராஹிம் அரங்கில் நடைபெற்ற ஆட்டத்தில் பயற்றுநர் ஹேக்டர் பிடோகிலோ தலைமையிலான ஜோகூர் நெகிரி செம்பிலானை 5-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்திய வேளையில் கோல நெருஸ் மிஸான் ஜைனால் அபிடின் அரங்கில் நடைபெற்ற மற்றொரு ஆட்டத்தில் சபா எப்.சி. குழு திரங்கானுவிடம் 0-2 என்ற கோல் கணக்கில் தோல்வி கண்டது.
இப்பருவம் முடிய இன்னும் மூன்று ஆட்டங்கள் எஞ்சியுள்ள நிலையில் இந்த தொடரில் நடைபெற்ற 18 பங்கேற்றதன் வழி மொத்தம் 46 புள்ளிகளை ஜோகூர் குழு பெற்றுள்ளது. 36 புள்ளிகளைப் பெற்றுள்ள சபா குழு இரண்டாவது இடத்தில் உள்ளது.