ஷா ஆலம், அக் 2- மூன்று வாரங்களுக்கு மேல் தொடர்ச்சியாக நீடிக்கும் இருமல், இரத்தம் கலந்த சளி, உடல் எடை குறைவது போன்ற அறிகுறிகள் உள்ளவர்கள் உடனடியாக மருத்துவரை நாடி சிகிச்சைப் பெறும்படி கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.
இத்தகைய அறிகுறிகளைக் கொண்டவர்கள் காச நோயினால் பீடிக்கப்பட்டதற்கான சாத்தியம் உள்ளதாக பொது சுகாதாரத் துறைக்கான ஆட்சிக்குழு உறுப்பினர் டாக்டர் சித்தி மரியா மாமுட் கூறினார்.
இந்நோயினால் பீடிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சையளிப்பதற்காக மாநில அரசு 800,000 வெள்ளியை ஒதுக்கீடு செய்துள்ளதாக அவர் சொன்னார்.
சிலாங்கூர் மக்களுக்கு சிறப்பு மருத்துவ சுகாதாரத் திட்டத்தை மாநில அரசு அறிமுகப்படுத்தியுள்ளது. அதாவது, காச நோயினால் பாதிக்கப்பட்டவர்கள் சிகிச்சைப் பெறுவதற்கு ஏதுவாக 800,000 வெள்ளி ஒதுக்கப்பட்டுள்ளது என்று அவர் குறிப்பிட்டார்.
உண்மையில் காச நோயிலிருந்து நாம் விடுபட முடியும் என்பதோடு சிகிச்சையும் பெற இயலும். மருத்துவர்கள் கூறும் ஆலோசனைகளை பின்பற்றி நடப்பது முக்கியமாகும். காச நோயிலிருந்து விடுபட்ட சமுதாயத்தை உருவாக்குவது சாத்தியமற்ற ஒன்றல்ல என்று அவர் தனது பேஸ்புக் பதிவில் கூறினார்.
இந்த காச நோய் நிதியுதவித் திட்டம் தொடர்பில் மேல் விபரங்களைப் பெற விரும்புவோர் www.selangorprihatin.com/insentifrawatantibi என்ற அகப்பக்கம் வாயிலாக அல்லது 1800-22-6600 என்ற எண்களில் 24 மணி நேர சேவை வழி தொடர்பு கொள்ளலாம் என அவர் குறிப்பட்டார்.