கோலாலம்பூர், அக். 3 – நாடாளுமன்ற உறுப்பினர்கள் கட்சி மாறுவதைத் தடைசெய்யும் 2022 ஆம் ஆண்டு அரசியலமைப்பு சட்டம் (திருத்தம்) (எண். 3) விரைவில் அமலுக்கு வரும்.
வரும் 15வது பொதுத் தேர்தலுக்கு முன்னதாக இச்சட்டத்தை அமல்படுத்த பிரதமர் இணக்கம் தெரிவித்துள்ளார் என்று பிரதமர் துறை அமைச்சர் (நாடாளுமன்றம் மற்றும் சட்ட விவகாரங்கள்) டத்தோஸ்ரீ வான் ஜுனைடி துவாங்கு ஜாபர் கூறினார்.
மாட்சிமை தங்கிய பேரரசர் அல்-சுல்தான் அப்துல்லா ரியாதுடின் அல்-முஸ்தபா பில்லா ஷாவின் ஒப்புதலை இந்தச் சட்டம் பெற்றுள்ள போதிலும் அது இன்னும் அமலாக்கத்திற்கான தேதியைக் கொண்டிருக்கவில்லை என்று அவர் சொன்னார்.
இந்தச் சட்டம் 15வது பொதுத் தேர்தலுக்கு முன்பாகவே நடைமுறைக்கு வரும். எனவே, பொறுமையாக இருங்கள். விரைவில் இது குறித்து அறிவிப்பேன் என்று அவர் தெரிவித்தார்.
பதினைந்தாவது பொதுத் தேர்தல் விரைவில் நடைபெறலாம் என எதிர்பார்க்கப்படும் நிலையில் அதற்கு முன்னதாக இச்சட்டம் அமல்படுத்தப்படுமா என நிருபர்கள் எழுப்பிய கேள்விக்கு அவர் இவ்வாறு பதிலளித்தார்.
முன்னதாக, 14வது நாடாளுமன்றத்தின் ஐந்தாவது தவணைக்கான இரண்டாவது கூட்டத்தின் போது நிறைவேற்றப்பட்ட அரசியலமைப்பு (திருத்தம்) சட்டம் (எண். 3) 2022 உட்பட 14 சட்டங்களுக்கு பேரரசர் தனது ஒப்புதலை வழங்கியதாக மக்களவையில் இன்று காலை தெரிவிக்கப்பட்டது.
நாடாளுமன்றம் எந்த நேரத்திலும் கலைக்கப்படும் என்ற ஊகங்களுக்கு மத்தியில் இந்த வெள்ளிக்கிழமை திட்டமிட்டபடி 2023 ஆம் ஆண்டிற்கான பட்ஜெட் தாக்கல் செய்யப்படும் என்று வான் ஜுனைடி கூறினார்.