கிள்ளான், அக் 10- ‘வானிஸ்‘ எனப்படும் வனிதா நாடி சிலாங்கூர் அமைப்பின் ஏற்பாட்டில் கடந்த சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் இங்குள்ள தாமான் செந்தோசாவில் நடத்தப்பட்ட இலவச ஆடை விநியோகத் திட்டத்தின் மூலம் 2,000 பேர் வரை பயன்பெற்றனர்.
கோத்தா ராஜா சமூக நல மற்றும் ஒருமைப்பாட்டு சங்கத்தின் ஆதரவுடன் நடத்தப்பட்ட இந்த சந்தையில் ஆண்கள், பெண்கள் மற்றும் சிறார்களுக்கான ஆடைகள் இலவசமாக விநியோகிக்கப்பட்டதாக வானிஸ் தலைவர் சங்கீதா ஜெயக்குமார் கூறினார்.
வசதி குறைந்த குறிப்பாக தீபாவளிக்கான ஏற்பாடுகளைச் செய்வதில் நிதி நெருக்கடியை எதிர்நோக்கி வரும் இந்துக்களுக்கு உதவும் நோக்கில் இந்த திட்டத்தை தாங்கள் அமல்படுத்தியதாக அவர் சொன்னார்.
இந்த இலவ ஆடை விநியோக நிகழ்வு தொடர்பான அறிவிப்புகள் டிக் டாக் செயலி வாயிலாக வெளியிடப்பட்டன. இதற்கு பொது மக்களிடமிருந்து அமோக ஆதரவு கிடைத்தது. கிள்ளான் மற்றும் அதன் சுற்றுவட்டார மக்களிடமிருந்து இத்திட்டத்திற்கு இவ்வளவு ஆதரவு கிடைக்கும் என நான் சிறிதும் எதிர்பார்க்கவில்லை என அவர் குறிப்பிட்டார்.
இது நகர்புற வறுமை நிலையை பிரதிபலிக்கிறது. ஏழைகள் குறிப்பாக அதிக பிள்ளைகளைக் கொண்டவர்கள் உணவு வாங்க மட்டுமின்றி உடைகளை வாங்கவும் இயலாத நிலையில் உள்ளதை உணர முடிகிறது. இத்திட்டத்தின் வாயிலாக அவர்களுக்கு ஓரளவு உதவ முடியும் என நம்புகிறோம் என்று அவர் சொன்னார்.
கடந்த சனிக்கிழமை பிற்பகல் 2.00 மணி முதல் இரவு 8.00 மணி வரை நடைபெற்ற இந்த நிகழ்வில் சுமார் 5,000 உடைகள் வரை விநியோகிக்கப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டார்.