கோல திரங்கானு, அக் 16- நாட்டில் நிலையற்றதாக இருக்கும் முட்டை விநியோகப் பிரச்சனைக்கு தீர்வு காணும் வகையில் அந்த உணவுப் பொருள் விநியோகிப்பாளர்களுடன் உள்நாட்டு வர்த்தகம் மற்றும் பயனீட்டாளர் விவகார அமைச்சு கலந்துரையாடலை நடத்தவுள்ளது. முட்டைக்கான உச்சவரம்பு விலை அமலாக்கம் நீண்ட நாட்களுக்கு நீடிப்பதால் வணிகத்தை நிறுத்த வேண்டிய கட்டாயத்தில் தாங்கள் உள்ளதாக முட்டை விநியோகிப்பாளர்கள் வெளியிட்டுள்ள மனக்குமுறலும் இந்த கலந்துரையாடல் கவனத்தில் கொள்ளும் என்று உள்நாட்டு வர்த்தகம் மற்றும் பயனீட்டாளர் விவகார துணை அமைச்சர் டத்தோ ரோசோல் வாஹிட் கூறினார். மிகவும் நீண்டதாக இருக்கும் உச்சவரம்பு விலை காலம் விநியோகச் சங்கிலியையும் பாதித்துள்ளதாக விநியோகிப்பாளர்கள் கூறுகின்றனர். ஆனால், மானியத்தை ஒரு முட்டைக்கு எட்டு சென்னாக உயர்த்தியதன் மூலம் அரசாங்கம் இவ்விவகாரத்தில் தலையிட்டது என்று அவர் தெரிவித்தார். மானியக் கோரிக்கைகள் சீராக நடைபெறுவதை உறுதிசெய்யவும், அது ஒரு காரணமாக மாறாமல் இருப்பதை உறுதிசெய்யவும், சந்தையில் முட்டைகளின் நிலையான விநியோகத்தை உறுதிப்படுத்தவும் உரிய நடவடிக்கை எடுக்கும்படி வேளாண்மை மற்றும் உணவுத் தொழில் அமைச்சை பயனீட்டாளர் விவகார அமைச்சு கேட்டுக் கொண்டது என்றும் அவர் குறிப்பிட்டார். நாட்டின் பல பகுதிகளில் முட்டை விநியோகத் தட்டுப்பாடு தொடர்பில் அமைச்சு புகார்களைப் பெற்று வருவதையும் துணையமைச்சர் ஒப்புக் கொண்டார்
![](https://selangorkini.my/ta/wp-content/uploads/2022/10/FW1151681_KL64_21032021_TELUR-lpr-960x641.jpg)