ஷா ஆலம், அக் 16- வெள்ளத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவ வேண்டும் என்பதற்காக சிலாங்கூர், நெகிரி செம்பிலான் மற்றும் பினாங்கு மாநில சட்டமன்றங்களைக் கலைக்கப்பதில்லை என முடிவெடுக்கப்பட்டதாக பக்காத்தான் ஹராப்பான் (ஹரப்பான்) தலைவர் கூறினார்.
சட்டப்பூர்வமாக தேர்ந்தெடுக்கப்பட்ட மாநில அரசு பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவிகளை வழங்குவதற்கு ஏதுவாக இம்முடிவு எடுக்கப்பட்டதாக டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் கூறினார். உண்மையில் அதுதான் எங்களின் கொள்கையாகும். அரசாங்கப் பணத்தையும் ஒதுக்கீட்டையும் தேர்தலுக்கு பயன்படுத்த முடியாது. அதனால்தான் மத்திய, மாநில அரசுகள் பதவி விலகியவுடன் அவர்கள் சட்டதிட்டங்களையும் தேர்தல் ஆணையத்தின் (எஸ்.பி.ஆர்.) விதிகளையும் மீறியிருக்கிறார்கள்.
ஆகவே, வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவிகள் வழங்குவதில் நெகிரி செம்பிலான், சிலாங்கூர் மற்றும் பினாங்கு மாநில அரசுகள் கவனம் செலுத்துகின்றன என்றார் அவர்.
இங்குள்ள ராஜா மூடா மூசா மண்டபத்தில் 15வது பொதுத் தேர்தலுக்கான இல்திசஸாம் மற்றும் ஹராப்பான் மகளிர்ப் பிரிவின் தேர்தல் இயந்திரத்தை தொடக்கி வைத்தப் பின்னர் செய்தியாளர்களிடம் அவர் இதனைக் கூறினார். ஹராப்பான் ஆளும் மூன்று மாநிலங்களான ஆகவே, சிலாங்கூர், நெகிரி செம்பிலான் மற்றும் பினாங்கு ஆகியவை நாடாளுமன்றத்தைப் பின்பற்றி சட்டமன்றத்தைக் கலைக்காது என்று அன்வார் கடந்த 5ஆம் தேதி கூறியிருந்தார்.
மக்களைப் பாதிக்கும் வெள்ளப் பிரச்சினையைக் கையாள்வதே சம்பந்தப்பட்ட மூன்று மாநிலங்களின் தலையாய நோக்கமாகும் என்று ஹராப்பான் தலைவருமான அவர் விளக்கினார்.