சிப்பாங், அக் 31- சிலாங்கூர் மாநில அரசினால் அமல்படுத்தப்பட்டுள்ள 5,000 வெள்ளி மானியத் திட்டம் மூலம் மகளிர் மற்றும் தனித்து வாழும் தாய்மார்களுக்கான திட்டங்களை முன்னெடுக்கும் வாய்ப்பினை அத்தரப்பினர் சார்ந்த அமைப்புகளுக்கு வழங்கும்.
தங்கள் தொகுதியிலுள்ள தனித்து வாழும் தாய்மார்களின் பொருளாதார நிலையை உயர்த்துவதற்காக தொழில் முனைவோர் பயிற்சியை நடத்த தாங்கள் திட்டமிட்டுள்ளதாக லெம்பா ஜெயா தொகுதிக்கான பொருளாதார, சமூக நல மற்றும் மகளிர் அமைப்பின் தலைவர் நோரித்தா சே அலி கூறினார்.
கோவிட்-19 பெருந்தொற்று காலத்தில் அமல்படுத்தப்பட்ட நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை காரணமாக தனித்து வாழும் தாய்மார்களில் பலர் மனோ ரீதியாக பாதிக்கப்பட்டுள்ளதால் அவர்களுக்கு தன்முனைப்பு பயிற்சியை வழங்குவது குறித்தும் தாங்கள் ஆலோசித்து வருவதாக அவர் குறிப்பிட்டார்.
தனித்து வாழும் தாய்மார்கள் மேம்பாட்டில் நாங்கள் அதிக கவனம் செலுத்துகிறோம். எங்களின் இந்த உதவி அவர்களுக்கு வழிகாட்டுதலையும் அதன் மூலம் பொருளாதாரத்தை உயர்த்திக் கொள்வதற்குரிய வாய்ப்பினையும் வழங்கும் என நம்புகிறோம் என்று அவர் சொன்னார்.
தனித்து வாழும் தாய்மார்களின் வளர்ச்சியில் அக்கறை காட்டி வரும் மாநில அரசுக்கு நாங்கள் நன்றி தெரிவித்துக் கொள்கிறோம். மாநில அரசின் இந்த மானியம் முறையான நடவடிக்கைகளுக்கு பயன்படுத்தப்படும் என எதிர்பார்க்கிறோம் என்றார் அவர்.
முன்னதாக, இங்குள்ள கேஐபி கோத்தா வாரிசானில் நடைபெற்ற ஜெலாஜா சிலாங்கூர் பென்யாயாங் நிகழ்வில் தனித்து வாழும் தாய்மார்களுக்கான மானியத்தை மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி ஒப்படைத்தார்.