ECONOMYMEDIA STATEMENTNATIONAL

வாக்காளர்கள் வருந்தும் நிலையை ஒருபோதும் ஏற்படுத்த மாட்டேன்- கோல லங்காட் வேட்பாளர் மணிவண்ணன் வாக்குறுதி

கோல லங்காட், நவ 16- வரும் பொதுத் தேர்தலில் கோல லங்காட் தொகுதியில் பக்கத்தான் ஹராப்பான் கூட்டணியை வெற்றியடையச் செய்தால் தொகுதி வாக்காளர்கள் ஒருபோதும் வருத்தமடையும் சூழலை ஏற்படுத்த மாட்டேன் என்று ஹராப்பான் வேட்பாளர் வாக்குறுதியளித்துள்ளார்.

இந்த தொகுதி மக்களை பிரதிநிதிக்கும் அளவுக்கு கட்சித் தலைமைத்துவம் தம்மீது வைத்துள்ள நம்பிக்கையை ஒருபோதும் வீணடிக்க மாட்டேன் என்று மணிவண்ணன் கோவின் கூறினார்.

பக்கத்தான் ஹராப்பான் வேட்பாளரை ஏன் தேர்ந்தெடுத்தோம் என தொகுதி மக்கள் வருந்தும் நிலையை ஒருபோதும் ஏற்படுத்த மாட்டேன். என்னை கட்சித் தலைமைத்துவம் அதாவது டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் மற்றும் துணைத் தலைவர் ரபிஸி ரம்லி இங்கு அனுப்பியுள்ளனர்.

அவ்விரு உயர்மட்டத் தலைவர்களும் என் மீது வைத்துள்ள நம்பிக்கை அளப்பரியது. ஆகவே, பொறுப்புகளை செவ்வனே நிறைவேற்றுவது எனது தலையாய கடமையாகும் என்றார் அவர்.

நேற்று இங்கு டத்தோஸ்ரீ அன்வார் தலைமையில் நடைபெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் அவர் இவ்வாறு தெரிவித்தார்.

பந்திங் மருத்துவமனை மற்றும் சுகாதார கிளினிக்குகளை தரம் உயர்த்துவது, போக்குவரத்து நெரிசலைக் குறைப்பதற்கான விரிவான திட்டத்தை வகுப்பது உள்ளிட்ட கோல லங்காட் தொகுதிக்கான ஆறு அம்ச கொள்கையறிக்கையை மணிவண்ணன் வெளியிட்டுள்ளார்.


Pengarang :