ஷா ஆலம், நவ 18- தங்களின் தேர்தல் பிரச்சார பலகைகள் கண்ணியமற்ற வார்த்தைகளால் கிறுக்கி சேதப்படுத்தப்பட்டது குறித்து மிகுந்த வருத்தமடைந்துள்ள போதிலும் தாங்கள் தொடர்ந்து பொறுமையைக் கடைபிடித்து வரப்போவதாக உலு சிலாங்கூர் தொகுதி ஹராப்பான் வேட்பாளர் கூறினார்.
சுங்கை சோ மற்றும் பாத்தாங் காலியிலுள்ள இரு பிரச்சாரப் பலகைகள் சேதப்படுத்தப்பட்டுள்ளது நேற்று காலை கண்டுபிடிக்கப்பட்டதாக டாக்டர் சத்திய பிரகாஷ் நடராஜன் கூறினார்.
இது எதிர்க்கட்சியினரின் சினமூட்டும் செயலாகும். மூலதனம் இல்லாத அவர்கள் வாக்குகளைக் கவர்வதற்கு இந்த குறுக்கு வழியைக் கடைபிடிக்கின்றனர் என்று அவர் சொன்னார்.
ஆகவே, நாம் அமைதியாகவும் பொறுமையுடனும் இருக்க வேண்டும் என்பதோடு உலு சிலாங்கூர் மக்களுக்கு உண்மையை எடுத்துரைக்க வேண்டும். இன்னும் இரு தினங்களே உள்ளன. அதுவரை பொறுமை காப்போம் என அவர் தனது பேஸ்புக் பதிவில் தெரிவித்தார்.
எதிர்த்தரப்பினர் மேற்கொள்ளும் அனைத்து விதமான சினமூட்டும் நடவடிக்கைகளையும் ஹராப்பான் தேர்தல் பணியாளர்கள் அமைதியுடனும் பொறுமையுடனும் எதிர் கொள்வர் என்றும் அவர் குறிப்பிட்டார்.
தாம் தீவிரப் பிரச்சாரம் மேற்கொண்டு மக்களை தொடர்ந்து சந்தித்து வரும் காரணத்தால் தொகுதியில் ஹராப்பானுக்கு ஆதரவு பெருகி வருவதாக அவர் சொன்னார்.