ECONOMYMEDIA STATEMENTNATIONAL

வாக்களிப்பில் மறவாமல் பங்கெடுங்கள், ஊழலற்றவர்களைத் தேர்ந்தெடுங்கள்- இளையோருக்கு ரமணன் வேண்டுகோள்

பெட்டாலிங், நவ 18- நாட்டின் பதினைந்தாவது பொதுத் தேர்தல் நாளை நடைபெறவுள்ள நிலையில் நாடு முழுவதும் உள்ள இளைஞர்கள் மறவாமல் வாக்களிப்பில் கலந்து கொள்ள வேண்டுமாய் சுங்கை பூலோ தொகுதி பக்கத்தான் ஹராப்பான் வேட்பாளர் கேட்டுக் கொண்டுள்ளார்.

ஊழலற்றத் தலைவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவதற்கு ஏதுவாக இளைஞர்கள் திரண்டு வந்து தங்கள் ஜனநாயக க் கடமையை ஆற்ற வேண்டும் என்று  டத்தோ ஆர்.ரமணன் கூறினார்.

வாக்குரிமை உங்கள் கைகளில் உள்ளது. மாற்றத்தையும் புதுமைகளையும் செய்யும் வல்லமையை அந்த வாக்கு கொண்டுள்ளது என்று அவர் சொன்னார்.

திருட்டு, கொள்ளை மற்றும் ஊழல் தொடர்ந்து நடைபெற அனுமதித்தால் தங்கள் எதிர்காலம் இருள்மயமாகி விடும் என்பதை இளைஞர்கள் உணர வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

ஆகவே, இளம் தலைமுறையினர் மாற்றங்களைச் செய்வதற்கான முக்கிய தருணம் இதுவாகும். நாடு தொடர்ந்து  மோசமான நிலைக்குச் செல்வதை அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு பார்த்துக் கொண்டிருக்க முடியாது என அவர் தெரிவித்தார்.

நாட்டின் எதிர்காலம் இளம் வாக்காளர்களிடம் உள்ளது. இருள்மயமான எதிர்காலத்தை அவர்களுக்கு விட்டுச் செல்ல முடியாது என்றும் அவர் சொன்னார்.

சுங்கை பூலோ தொகுதி மக்களும் நாளை திரளாக வந்து வாக்களிக்கும் அதே வேளையில் வாக்குப் பெட்டிகளின் வாயிலான மாற்றங்களைச் செய்ய வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தினார்.


Pengarang :