ஷா ஆலம், நவ 20– பதினைந்தாவது பொதுத் தேர்தலில் தேசிய முன்னணி அடைந்த படுதோல்வியின் எதிரொலியாக அம்னோ தகவல் பிரிவுத் தலைவர் தனது பதவியைத் துறந்துள்ளார்.
தேசிய முன்னணியின் இந்த தோல்விக்கு பொறுப்பேற்று அதன் தலைவர் டத்தோஸ்ரீ அகமது ஜாஹிட் ஹமிடிகௌரவமாக பதவி விலக வேண்டும் என்று ஷாரில் ஹம்டான் வலியுறுத்தினார்.
இவ்விவகாரத்தில் ஜோகூர் மந்திரி புசார் டத்தோ ஓன் ஹபிஷ் காஸியின் கருத்தை தாம் பிரதிபலிப்பதாகவும் அவர் சொன்னார்.
முதன்மை தலைவர் என்ற முறையிலும் அம்னோ மற்றும் தேசிய முன்னணி தலைவர் என்ற முறையிலும் ஜாஹிட்சிறந்த முன்னதாரணத்தைக் காட்ட வேண்டும் என்பதோடு தோல்விக்கு பொறுப்பேற்று கௌரவமாக பதவி விலக வேண்டும்.
கட்சியின் எதிர்காலம் குறித்து மற்ற தலைவர்களும் தனிநபர்களும் விவாதித்து முடிவெடுக்கட்டும் என்று பேஸ்புக் வாயிலாக வெளியிட்ட அறிக்கையில் அவர் தெரிவித்தார்.
கட்சியின் எதிர்கால நலன் கருதி ஜாஹிட் அம்னோ தலைவர் பதவியைத் துறக்க வேண்டும் என்று ஓன் ஹபிஷ் முன்னதாக வலியுறுத்தியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
நேற்று நடைபெற்ற நாட்டின் பதினைந்தாவது பொதுத் தேர்தலில் தேசிய முன்னணி 30 இடங்களை மட்டுமே பெற்றது. நாட்டின் அரசியல் வரலாற்றில் அக்கட்சிக் இவ்வளவு மோசமான தோல்வியைக் கண்டது இதுவே முன்முறையாகும்.