கோலாலம்பூர், நவ 20- பதினைந்தாவது பொதுத் தேர்தலில் அதிக இடங்களைப் பெற்ற அரசியல் கட்சிகள் மற்றும் அதன் கூட்டணிகளின் தலைவர்கள் தங்கள் கட்சிக் கூட்டணி மற்றும் பிரதமர் வேட்பாளர் குறித்த விபரங்களை நாளை பிற்பகல் 2.00 மணிக்குள் அரண்மனையிடம் சமர்ப்பித்துவிடும்படி மாட்சிமை தங்கிய மாமன்னர் உத்தரவிட்டுள்ளார்.
நேற்று நடந்து முடிந்த பொதுத் தேர்தலில் ஆட்சி அமைக்கும் அளவுக்கு எந்த கட்சிக்கும் அறுதிப் பெரும்பான்மை கிடைக்கவில்லை என்ற தகவலை அல்-சுல்தான் அப்துல்லா ரியாத்துடின் அல்-முஸ்தாபா பில்லா ஷா பெற்றுள்ளதாக இஸ்தானா நெகாரா அதிகாரி டத்தோஸ்ரீ அகமது பாடில் சம்சுடின் கூறினார்.
ஆகவே, இதில் சம்பந்தப்பட்டுள்ள அனைத்து அரசியல்கட்சிகளும் ஆட்சி அமைப்பதற்கு தங்களுடன் கூட்டு சேர்ந்துள்ள கட்சிகள் மற்றும் ஒப்புக் கொள்ளப்பட்ட பிரதமர் வேட்பாளர் குறித்த விபரங்களை பெறுவதில் மக்களவைத் தலைவர் டான்ஸ்ரீ அஸார் ஹருணின் உதவியை இஸ்தானா நெகாரா நாடியுள்ளது என அவர் சொன்னார்.
பதினைந்தாவது பொதுத் தேர்தல் முடிவுகள் தொடர்பானஅதிகாரப்பூர்வ ஆவணத்தை தேர்தல் ஆணையத் தலைவர்டான்ஸ்ரீ அப்துல் கனி இன்று பிற்பகல் 1.15 மணியளவில் இஸ்தானா நெகாராவில் மாமன்னரிடம் ஒப்படைத்தார்.