MEDIA STATEMENT

பிளஸ் நெஞ்சாலையில் சுங்கை பூலோ அருகே விபத்து- இருவர் மரணம், அறுவர் காயம்

கோலாலம்பூர், நவ 22- வடக்கு-தெற்று நெடுஞ்சாலையின் தெற்கு நோக்கி செல்லும் தடத்தின் 425வது கிலோ மீட்டரில் சுங்கை பூலோ அருகே இன்று அதிகாலை நிகழ்ந்த இரு கார்கள் சம்பந்தப்பட்ட சாலை விபத்தில் இருவர் பலியானதோடு மேலும் அறுவர் காயங்களுக்குள்ளாகினர்.

இந்த கோர விபத்தில் சிறுமியும் ஆடவரும் பலியானதாக சிலாங்கூர் மாநில தீயணைப்பு மற்றும் மீட்புத் துறையின் இயக்குநர் நோராஸாம் காமிஸ் கூறினார்.

இந்த விபத்து தொடர்பில் அதிகாலை 2.29 மணியளவில் தங்களுக்கு தகவல் கிடைத்தைத் தொடர்ந்து 26 நிமிடங்களில் தமது குழுவினர் சம்பவ இடத்தை அடைந்ததாக அவர் சொன்னார்.

புரோட்டோன் வீரா ரகக் கார் டோயோட்டா வியோஸ் காரை மோதியது தொடக்கக் கட்ட விசாரணயில் தெரிய வந்துள்ளது என்று அவர் தெரிவித்தார்.

இந்த விபத்தில் எண்மர் பாதிக்கப்பட்டனர். அவர்களில் இருவர் உயிரிழந்ததை சுகாதார அமைச்சு தரப்பினர் உறுதி செய்தனர். மேலும் இரு பெண்கள் கடுமையாக காயமுற்ற வேளையில் இருவர் லேசான காயங்களுக்குள்ளாகினர் என்றார் அவர்.

காயமடைந்த அனைவரும் சிகிச்சைக்காக சுங்கை பூலோ மருத்துவமனைக்கு கொண்டுச் செல்லப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார்.

 


Pengarang :