ஷா ஆலம் நவ 26- சிலாங்கூரில் பருவநிலை மாற்றம் தொடர்பான
ஆய்வுப் பணிகளை மேற்கொள்வதற்கும் கொள்கைகளை வகுப்பதற்கும்
300,000 லட்சம் வெள்ளி ஒதுக்கப்பட்டுள்ளதாக மந்திரி புசார் டத்தோஸ்ரீ
அமிருடின் ஷாரி கூறினார்.
வெள்ளம் மற்றும் நிலச்சரிவுக்கு காரணமான பருவநிலை மாற்றம் மற்றும்
தீவிர வானிலை மாற்றம் ஆகியவற்றோடு புதிதாக உருவெடுத்துள்ள
வெப்ப அலை, கடல் மட்டம் உயர்வு, பல்லுயிர் அழிவு போன்ற
அபாயங்களை மாநில அரசு கடுமையாக கருதுவதாக அவர் சொன்னார்.
மாநில அரசுக்கும் சம்பந்தப்பட்ட துறைகளுக்கும் வழிகாட்டியாக
விளங்கக்கூடிய கொள்கைகளின் உருவாக்கத்தின் வாயிலாக சமூகத்தின்
போட்டியிடும் ஆற்றலை குறுகிய கால, மத்திய கால மற்றும் நீண்டகால
அடிப்படையில் ஒருங்கிணைக்க முடியும் என்று அவர் குறிப்பிட்டார்.
சமநிலையான பொருளாதாரத்தை அதிகரிப்பதற்கும் நீடித்த சூழலியல்
முறையை உறுதி செய்வதற்கும் ஏதுவாக பருவநிலை மாற்றத்தின்
பல்வேறு அம்சங்களைக் கருத்தில் கொண்டு வரும் 2030 வரையிலான
மேம்பாட்டை வலுப்படுத்துவதை இந்த ஆய்வு மையமாக கொண்டிருக்கும்
என அவர் மேலும் தெரிவித்தார்.
சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் நீர் வளம் மேலாண்மைத் திட்டங்கள்
தொடர்ந்து அமல்படுத்தப்படும் என்றும் அவர் சொன்னார்.
இதன் அடிப்படையில் மறுசீரமைப்பு மற்றும் விழிப்புணர்வு திட்டங்களை
அமல்படுத்துவதற்கு மாநில அரசு 800,000 வெள்ளியை ஒதுக்கீடு செய்யும்.
இது தவிர ஆறுகள் மற்றும் கடற்கரைகளின் மேம்பாட்டிற்காக 400,000
வெள்ளி ஒதுக்கப்படும் என அவர் தெரிவித்தார்.