கோம்பாக், டிச 12 - நிலச்சரிவு மீதான சிறப்பு பணிக் குழுவிடமிருந்து முழு அறிக்கை கிடைத்த பிறகு மாநிலம் முழுவதும் நிலச்சரிவுகளைச் சமாளிப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று சிலாங்கூர் மந்திரி புசார் கூறினார். மலேசிய கனிமவள மற்றும் புவி அறிவியல் துறை உட்பட பல நிபுணர்களைக் கொண்ட அந்த பணிக்குழு முதற்கட்ட ஆய்வு அறிக்கையை சமர்ப்பித்துள்ளதாக டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி தெரிவித்தார். முழுமையான அறிக்கை கிடைக்கும் பட்சத்தில் மண்ணின் மிருது தன்மையின் அளவை அறிந்து அதற்கு தேவையான நிதி ஒதுக்கீடுகள் உள்ளிட்ட நடவடிக்கைகளை எடுக்க முடியும் என அவர் சொன்னார். எனினும் அனைத்து அம்சங்களையும் உள்ளடக்கிய முழுமையான அறிக்கையைத் தயாரிப்பதற்கு கால அவகாசம் தேவை. ஓரிரு வருடங்களில் முழுமையான நடவடிக்கையை மேற்கொள்ள முடியும் என நம்புகிறோம். இப்போதைக்கு அதிக ஆபத்துள்ள பகுதிகளை அடையாளம் கண்டு வருகிறோம் என்று அவர் கூறினார். கம்போங் சுங்கை புசுவில் நிலச்சரிவில் பாதிக்கப்பட்ட அப்துல் மாலிக் முகமட் ஹாஷிமி என்பவரின் வீட்டை பார்வையிட்டப் பின்னர் செய்தியாளர்களிடம் அவர் இதனைச் சொன்னார். இந்த மாதம் பெய்து வரும் அடை மழையைத் தொடர்ந்து அம்பாங் மற்றும் பூச்சோங்கில் இரு இடங்களில் நிலச் சரிவு ஏற்பட்டது. எனினும், இச்சம்பவத்தில் யாரும் பாதிக்கப்படவில்லை. வீடு மற்றும் வாகனங்களுக்கு மட்டுமே சேதம் ஏற்பட்டது.