ஷா ஆலம், ஜன 1- மாநில மக்களின் நல்லிணக்கத்தை பாதிக்கக்கூடிய எந்தவொரு தீவிரவாத மற்றும் வெறுப்புணர்வு அரசியலையும் சிலாங்கூர் அரசாங்கம் கடுமையாக எதிர்க்கும். சிலாங்கூர் மாநிலத்தில் இன ஒற்றுமை அரசியல் வன்முறைகளால் அழிக்கப்படாமல் இருப்பதை உறுதி செய்யும் பொறுப்பு மாநில அரசுக்கு உண்டு என்று மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி கூறினார். கடந்த 15வது பொதுத் தேர்தலின் போது ஆதரவைப் பெறுவதற்காக முன்னெடுக்கப்பட்ட தீவிரவாத செயல்திட்டங்களால் சமூக ஊடகங்கள் எவ்வாறு களங்கப்படுத்தப்பட்டன என்பதை நாம் கண்டோம். இந்த சிலாங்கூர் டாருள் ஏசான் மண்ணில் தீவிரவாதத்திற்கும் வெறுப்பு அரசியலுக்கும் இடமில்லை என்று அவர் திட்டவட்டமாகத் தெரிவித்தார். மலேசியாவின் சமூக சூழ்நிலையின் பிரதிபலிப்பாக சிலாங்கூர் இருப்பதால் தீவிரவாத அரசியலால் மாநிலத்தில் உள்ள சமூகக் கட்டமைப்பு அழிக்கப்படாமல் இருப்பதை உறுதிசெய்யும் பொறுப்பு எங்களுக்கு உள்ளது என்று அவர் தனது 2023 புத்தாண்டு வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளார். சிலாங்கூர் மக்களும் தாங்கள் தற்போது அனுபவித்து வரும் ஒற்றுமை மற்றும் நல்லிணக்கத்தைப் பாதுகாக்க ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என அவர் வலியுறுத்தினார். கித்தா சிலாங்கூர் உணர்வைக் கவசமாக கொண்ட நாம் நல்லிணக்கத்துடனும் அமைதியுடனும் வாழலாம். மாநிலத்தின் வளங்களை அனுபவிக்கலாம். அரசியலமைப்பின் உன்னதத்தின் அடிப்படையில் வாழலாம் என்று அவர் கூறினார். இதற்கிடையில், இந்த ஆண்டு நடைபெறும் மாநிலத் தேர்தலில் பக்காத்தான் ஹராப்பானுக்கு அதிகாரத்தை வழங்குமாறு மாநில மக்களுக்கு அமிருடின் வேண்டுகோள் விடுத்தார். இதன் மூலம் அக்கூட்டணி சிலாங்கூரில் அதன் சாதனைகளையும் வெற்றியையும் தொடர முடியும் என்றார் அவர்.