சிகாமாட், ஜன 15- நாடு முழுவதும் உள்ள மருத்துவமனைகள் மற்றும் சுகாதார மையங்களைத் தரம் உயர்த்துவதில் சுகாதார அமைச்சு கவனம் செலுத்த உள்ளது.
தற்போது நிர்மாணிப்பில் மருத்துவமனைகளின் பணிகள் தொடரப்படும் என்பதோடு புதிய மருத்துவமனைகளை நிர்மாணிப்பது தொடர்பில் எந்த முடிவு எடுக்கப்படவில்லை என்று சுகாதார அமைச்சர் டாக்டர் ஜலிஹா முஸ்தாபா கூறினார்.
தரம் உயர்த்தும் பணிகளில் தாம் தற்போது கவனம் செலுத்த உள்ளோம். சபா, சரவா உட்பட நாட்டில் உள்ள அனைத்து மருத்துவமனைகள் அல்லது சுகாகதார மையங்களின் தரத்தை உயர்த்த இருக்கிறோம் என்று அவர் குறிப்பிட்டார்.
சீனப் புத்தாண்டை முன்னிட்டு இங்குள்ள யு சென்ட்ரல் சிகாமாட் பேரங்காடியில் பொது மக்களுக்கு மாண்டரின் ஆரஞ்சு பழங்களை விநியோகித்த பின்னர் செய்தியாளர்களிடம் அவர் இதனைத் தெரிவித்தார்.
இதனிடையே, சீனப்புத்தாண்டு சமயத்தில் கோவிட்-19 நோய்த் தொற்று எண்ணிக்கை அதிகரிக்காது என சுகாதார அமைச்சு கருதுவதாக செகிஜாங் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினருமான அவர் சொன்னார்.
இருந்த போதிலும், கோவிட்-19 நோய்த் தொற்று தொடர்பான நிலவரங்களை தமது அமைச்சு அணுக்கமாக கண்காணித்து வரும் என டாக்டர் ஜலிஹா தெரிவித்தார்.
கடந்த காலங்களில் கொண்டாடப்பட்ட பெருநாள் காலத்தின் போதும் ஆகக் கடைசியாக நாட்டின் 15வது பொதுத் தேர்தல் சமயத்திலும் நோய்த் தொற்று அதிகரிக்கு என நாம் கணித்த போதிலும் அப்படி எதுவும் நிகழவில்லை. எது எப்படி இருப்பினும் நாம் முன்னெச்சரிக்கை நடவடிக்கையை தொடர்ந்து கடைப்பிடித்து வருவோம் என்றார் அவர்.