கோலாலம்பூர், ஜன 15- உணவகப் பணியாளர் ஒருவர் உயிரிழப்பதற்கு காரணமான வெடிச் சம்பவத்தில் தொடர்புடையவர்கள் என சந்தேகிக்கப்படும் கணவன், மனைவி இருவர் மீதும் அம்பாங் நீதிமன்றத்தில் நாளை குற்றஞ்சாட்டப்படும்.
நாளை காலை 10.00 மணியளவில் அவ்விருவரும் நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டப்படுவர் என்று அம்பாங் ஜெயா மாவட்ட போலீஸ் தலைவர் ஏசிபி முகமது ஃபாரூக் எஷாக் கூறினார்.
கெடா மாநிலத்தின் செர்டாங்கைச் சேர்ந்த அத்தம்பதியர் மீது குற்றவியல் சட்டத்தின் 302வது பிரிவின் கீழ் கொலைக் குற்றச்சாட்டு கொண்டு வரப்படும் என அவர் அறிக்கை ஒன்றில் தெரிவித்தார்.
கடந்த மாதம் 29ஆம் தேதி அம்பாங், பாண்டான் இண்டாவிலுள்ள உணவகம் ஒன்றின் எதிரே நிகழந்த இந்த வெடிச்சம்பவத்தில் 28 வயதுடைய உணவகப் பணியாளர் உயிரிழந்தார்.
காரின் மீது வைக்கப்பட்டிருந்த பொட்டலம் ஒன்றை அவ்வாடவர் எடுக்க முயன்ற போது அது திடீரென வெடித்தால் உடலில் தீக்காயங்களுக்குள்ளாகி மருத்துவமனையில் அவர் மரணமுற்றார்.