கோலபிலா, ஜன 15- பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியின் மொத்த அளவை மேலும் 500 ஹெக்டர் அதிகரிக்க நெகிரி செம்பிலான் மாநில வன இலாகா திட்டமிட்டுள்ளது.
சுற்றுச்சூழலை பாதுகாப்பதன் மூலம் மாநிலத்தில் சூழியல் சுற்றுலாவை மேம்படுத்தும் நோக்கில் இந்நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாக மாநில வன இலாகாவின் இயக்குநர் சாலே அவாலுடின் கூறினார்.
தற்போது மாநிலத்தில் 155,00 ஹெக்டர் பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியாக உள்ளது. இது மாநிலத்தின் மொத்தப் பரப்பளவில் 23 விழுக்காடாகும். அவற்றில் 60 விழுக்காடு வெட்டுமர காடுகளாகவும் எஞ்சியவை பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியாகவும் உள்ளது. எஞ்சிய பகுதிகள் நீர்ப்பிடிப்பு பகுதிகள் வனவாழ் உயிரினங்களின் புகலிடங்களாகவும் ஆராய்ச்சி இடங்களாகவும் உள்ளன என்று அவர் தெரிவித்தார்.
தற்போதுள்ள வனப்பகுதியை பாதுகாப்பதற்கும் அதன் அளவை மேலும் அதிகரிப்பதற்கும் நாம் எடுக்க வேண்டிய முயற்சிகளில் இதுவும் அடங்கும். சதுப்பு நிலக் காடுகளும் தற்போது குறைந்து காணப்படுகின்றன. பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியை சிறிது அதிகரித்தாலும் அது சிறந்த நடவடிக்கையாக அமையும் என்றார் அவர்.
நீர்ப்பிடிப்பு பகுதிகள் நீர்த்தேக்கங்கள் உள்ளிட்ட இடங்களை நாம் அடையாளம் கண்டுள்ளோம். அப்பகுதிகளை ஆர்ஜிதம் செய்யும் பணியில் தற்போது ஈடுபட்டு வருகிறோம்.அப்பணி அவ்வளவு எளிதானதல்ல. ஆகவே அதனை செய்வதற்கு சிறிது காலம் பிடிக்கும் என்று அவர் குறிப்பிட்டார்.