அம்பாங் ஜெயா, ஜன 20- எந்தவொரு விவகாரம் தொடர்பிலும் தலைவர்கள் மற்றும் ஊராட்சி மன்றங்களிடம் பொதுமக்கள் நேரடியாக கேள்வி கேட்பதற்கும் எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து அறிந்து கொள்வதற்கும் ஏதுவாக கலந்துரையாடல் நிகழ்வுகளை நடத்துவது ஒரு கலாசாரமாக்கப்பட வேண்டும் என வலியுறுத்தப் பட்டுள்ளது.
இத்தகைய கலந்துரையாடல்கள் வாயிலாக கருத்துப் பரிமாற்றம் செய்து கொள்வதற்கும் தீர்வுக்கான வழிவகைளை ஆழமாக ஆராய்வதற்கும் சம்பந்தப்பட்ட தரப்பினருக்கு வாய்ப்பு ஏற்படும் என்று அம்பாங் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் ரோட்சியா இஸ்மாயில் கூறினார்.
இதன் பின்னர் நாம் அடிக்கடி, முடிந்தால் இரண்டு மாதங்களுக்கு ஒரு முறை கலந்துரையாடல்களை நடத்துவோம். வட்டாரப் பிரச்னைகளைக் களைவதற்கு ஏதுவாக சம்பந்தப்பட்ட இடங்களிலும் இத்தகைய கலந்துரையாடல்களுக்கு எற்பாடு செய்வோம் என்றார் அவர்.
மலைச்சாரல் மேலாண்மை தொடர்பில் நேற்றிரவு இங்கு நடைபெற்ற பொது கலந்துரையாடல் நிகழ்வில் அவர் இதனைத் தெரிவித்தார்.
பொது மக்கள் தாங்கள் எதிர்நோக்கும் பிரச்னைகள் தொடர்பான புகார்களை ஊராட்சி மன்றங்களிடம் முறையான வழிகளில் தெரிவிக்கலாம் என்றும் அவர் ஆலோசனை கூறினார்.
வெறுமனே பேசிக்கொண்டிருக்காதீர்கள். உரிய நடவடிக்கை எடுப்பதற்கு ஏதுவாக முறையாக புகார் செய்யும் அதே வேளையில் தக்க ஆவணங்களையும் வைத்திருங்கள் என்றார் அவர்.