புத்ராஜெயா, ஜன 21- கடந்த 2022 ஆம் ஆண்டிற்கான மலேசிய கல்விச் சான்றிதழ் (எஸ்.பி.எம்.) தேர்வு ஜனவரி 30 முதல் மார்ச் 15 வரை நடைபெறும். அறிவியல் செய்முறைத் தேர்வு, பேச்சுத் தேர்வு, கேட்கும் தேர்வு மற்றும் எழுத்துத் தேர்வு ஆகியவற்றை இது உள்ளடக்கியிருக்கும் என்று கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. வரும் பிப்ரவரி 20 முதல் மார்ச் 15 வரை நடைபெறும் எழுத்துத் தேர்வை மொத்தம் 403,637 மாணவர்கள் எழுதுவார்கள் என்று ஒரு அமைச்சு ஓர் அறிக்கையில் தெரிவித்தது. ஜனவரி 30 ஆம் தேதி நடைபெறும் அறிவியல் நடைமுறைத் தேர்வை (இயற்பியல்) 93,490 மாணவர்களும் 31ஆம் தேதி நடைபெறும் அறிவியல் நடைமுறைத் தேர்வை (உயிரியல்) 74,642 மாணவர்களும் பிப்ரவரி 2ஆம் தேதி நடைபெறும் அறிவியல் நடைமுறைத் தேர்வை (வேதியியல்) 94,672 மாணவர்களும் பயிற்சி அறிவியல் (கூடுதல் அறிவியல்) தேர்வை 2,675 மாணவர்களும் எழுதுவார்கள். பிப்ரவரி 7 முதல் 9 வரை நடைபெறும் பேச்சுத் தேர்வில் (மலாய்) 397,854 விண்ணப்பதாரர்கள் பங்கேற்கும் அதே வேளையில் 13 முதல் 15 வரை நடைபெறும் ஆங்கில பேச்சுத் தேர்வில் 397,057 பேர் பங்கேற்பர். இந்த தேர்வு சுமூகமான முறையில் நடைபெறுவதை உறுதிப்படுத்துவதற்காக மொத்தம் 131,318 தேர்வு அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளதாக கல்வியமைச்சு தெரிவித்துள்ளது. நாடு முழுவதும் மொத்தம் 3,355 தேர்வு மையங்களில் இத்தேர்வுகள் நடைபெறும். தேர்வு கால அட்டவணையை தேர்வு வாரிய இணையதளத்தின் http://lp.moe.gov.my என்ற இணைப்பில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
![](https://selangorkini.my/ta/wp-content/uploads/2023/01/PSX_20220302_083356-960x640.jpg)