கோலாலம்பூர், ஜன 21- இவ்வாண்டு சீனப் பெருநாளை முன்னிட்டு மேற்கொள்ளப்படும் ஓப் செலாமாட் 19 நடவடிக்கையில் சாலைப் போக்குவரத்தைக் கண்காணிப்பதற்கு போலீசார் வான் நடவடிக்கைப் பிரிவின் (பி.ஜி.யு.) டிரோன் குழுவைப் யன்படுத்தவுள்ளனர்.
முக்கிய இடங்களில் போக்குவரத்தைக் கண்காணிப்பதற்காக நாட்டின் வடக்கு, தெற்கு மற்றும் கிழக்கு பகுதிகளில் உள்ள நெடுஞ்சாலைகளில் இந்த குழுவினர் பணியில் ஈடுபடுத்தப்படுவர் என்று புக்கிட் அமான் சாலைப் போக்குவரத்து மற்றும் விசாரணைத் துறையின் இயக்குநர் டத்தோ மாட் காசிம் கரீம் கூறினார்.
இந்த டிரோன் குழுவினரின் வாயிலாக தகவல்கள் வெகு விரைவாக களத்தில் உள்ள சாலை போக்குவரத்து போலீசாருக்கு அனுப்பப்பட்டு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று அவர் தெரிவித்தார்.
பயணத்தின் போது களைப்படையும் வாகனமோட்டிகள் நெடுஞ்சாலைகளில் உள்ள ஓய்வு மையங்களில் ஓய்வெடுத்துக் கொண்டு பயணத்தைத் தொடரும்படியும் அவர் கேட்டுக் கொண்டார்.
பெருநாள் காலத்தின் போது அசம்பாவிதங்கள் நிகழாதிருப்பதை உறுதி செய்ய சட்டதிட்டங்களையும் சாலை விதிகளையும் முறையாகப் பின்பற்றி நடக்கும்படி அனைத்து வாகனமோட்டிகளுக்கும் அவர் நினைவுறுத்தினார்.