ஷா ஆலம், ஜன 24- “அனிஸ்“ எனப்படும் சிலாங்கூர் பிரத்தியேக சிறார் இலாகாவின் சிறப்பு தளத்தின் வாயிலாக பேச்சுப் பயிற்சி சேவை வழங்கப்படுகிறது.
பேச்சுத் திறனைப் பெறுவதில் மந்தமாக காணப்படும் சிறார்களுக்கு உதவும் நோக்கில் பேச்சுத் திறன் துறையில் திறன் பெற்ற நிபுணர்களை அனிஸ் இலாகா ஏற்பாடு செய்வதாக மகளிர் மற்றும் குடும்ப மேம்பாட்டுத் துறைக்கான ஆட்சிக்குழு உறுப்பினர் டாக்டர் சித்தி மரியா மாமுட் கூறினார்.
இத்தகையச் சிறார்களைக் கொண்டுள்ள பெற்றோர்களுக்கு உதவும் வகையில் நிபுணர்களின் உதவியுடன் செயல்படக்கூடிய “அனிசை கேளுங்கள்“ எனும் தளத்தை நாங்கள் உருவாக்கியுள்ளோம். மலாயா பல்கலைக்கழக மருத்துவ மையத்தைச் சேர்ந்த மருத்துவ மறுவாழ்வு அதிகாரி புவான் நோராஸா ஹருண் இந்த நிபுணத்துவ சேவையை வழங்கவுள்ளார் என்றார் அவர்.
பிரத்தியேகச் சிறார்கள் தொடர்புடைய கேள்விகளை https://www.anisselangor.com/tanyaanis எனும் அகப்பக்கம் வாயிலாக கேட்கலாம் என்றும் அவர் தெரிவித்தார்.
பிரத்தியேகச் சிறார்கள் மற்றும் அனிஸ் திட்டம் தொடர்பான அனைத்து கேள்விகளுக்கும் பெற்றோர்கள் விடைகளைப் பெறுவதற்கு ஏதுவாக சிறப்புத் தளம் ஒன்று உருவாக்கப்படுவதாக கடந்த ஜனவரி மாதம் 18ஆம் தேதி மாநில அரசு அறிவித்தது.