ஜோகூர் பாரு, ஜன 24- கோத்தா திங்கி அருகே உள்ள பத்து லாயார் கடற்கரையில் குளித்துக் கொண்டிருந்த போது காணமால் போன 16 வயது இளைஞர் நேற்று கடலில் சடலமாக கண்டுபிடிக்கப்பட்டார்.
அந்த இளைஞர் காணாமல் போனதாக கூறப்படும் இடத்திலிருந்து சுமார் 100 மீட்டர் தொலைவில் நேற்று மாலை 5.20 மணியளவில் அவரது சடலம் கண்டு பிடிக்கப்பட்டதாக கோத்தா திங்கி மாவட்ட போலீஸ் தலைவர் சூப்ரிண்டெண்டன் ஹூசேன் ஜமோரா கூறினார்.
நேற்று காணாமல் போனதாக கூறப்படும் அந்த இளைஞரின் சடலம் கரையை நோக்கி மிதந்து வருவது கண்டுபிடிக்கப்பட்டதைத் தொடர்ந்து மீட்புக் குழுவினர் விரைந்து சென்று அதனைக் கைப்பற்றினர்.
உடைகளுடன் முழுமையாக காணப்பட்ட அந்த சடலத்தில் காயம் ஏதுவும் தென்படவில்லை என்று அவர் ஓர் அறிக்கையில் தெரிவித்தார்.
அந்த இளைஞரின் அடையாளம் அவரது பெற்றோர்களால் உறுதி செய்யப்பட்டதைத் தொடர்ந்து பரிசோதனைக்காக கோத்தா திங்கி மருத்துவமனைக்கு கொண்டுச் செல்லப்பட்டது என்று அவர் மேலும் சொன்னார்.