ஷா ஆலம், பிப் 10- அனைத்து ஊராட்சி மன்றங்களிலும் வழங்கப்பட்டுள்ள சிறு வணிகர்களுக்கான வர்த்தக லைசென்ஸ்களை மாநில அரசு மறு ஆய்வு செய்ய உள்ளது.
ஒருவரிடம் பல வர்த்தக லைசென்ஸ்கள் உள்ளது விசாரணையில் தெரியவந்துள்ளதைத் தொடர்ந்து இந்த நடவடிக்கை எடுக்கப்படுவதாக தொழில் முனைவோர் மேம்பாட்டு துறைக்கான ஆட்சிக்குழு உறுப்பினர் ரோட்சியா இஸ்மாயில் கூறினார்.
ஒரு சில தரப்பினரின் ஆதிக்கப் போக்கு காரணமாக மற்ற சிறு வணிகர்களுக்கு லைசென்ஸ் கிடைக்காமல் போகும் சூழலைத் தவிர்ப்பதற்காக இந்த நடவடிக்கை எடுக்கப்படுவதாக அவர் சொன்னார்.
மாநிலத்தில் உள்ள அனைத்து ஊராட்சி மன்றங்களிலும் வழங்கப்பட்டுள்ள 90,000 வர்த்தக லைசென்ஸ் களில் 77 விழுக்காடு ஒரே பெயரில் பதிவு செய்யப்பட்டு மாநிலத்தின் பல்வேறு இடங்களில் செயல்படுவது விசாரணையில் தெரியவந்துள்ளதாக அவர் தெரிவித்தார்.
எஞ்சிய 23 விழுக்காடு லைசென்ஸ்கள் ஒருவரின் பெயரில் பதிவு செய்யப்பட்டு பதிவு பெற்ற ஊராட்சி மன்றப் பகுதியில் வர்த்தகம் மேற்கொள்ளப்படுவது கண்டறியப்பட்டது என்றார் அவர்.
சில வேளைகளில் ஒருவர் 30 வர்த்தக லைசென்ஸ்கள் வரை வைத்துள்ளார். ஆனால், அத்தனை லைசென்ஸ்களும் ஒரே பெயரில் உள்ளன. சிலாங்கூர் மாநில பொருளாதார திட்டமிடல் பிரிவின் வாயிலாக ஆய்வு செய்த போது அந்த லைசென்ஸ் உரிமையாளர்கள் பல இடங்களில் வர்த்தகம் புரிவது தெரிய வந்துள்ளது என அவர் சொன்னார்.
இங்குள்ள டி பல்மா ஹோட்டலில் நேற்று நடைபெற்ற டிபியு சென். பெர்ஹாட் நிறுவனத்திற்கும் சிலாங்கூர் மாநில சிறு வர்த்தகர்களுக்கும் இடையிலான புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்திடும் நிகழ்வில் கலந்து கொண்டப் பின்னர் செய்தியாளர்களிடம் அவர் இதனைத் தெரிவித்தார்.
ஒருவருக்கு வழங்கப்பட்ட லைசென்சை மற்றவர் பயன்படுத்தும் “அலி பாபா“ முறையின் ஊடுருவலைத் தடுப்பதற்காக இவ்விவகாரம் மீது தீவிர கவனம் செலுத்தும் படி ஊராட்சி மன்றங்கள் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளன என்று அவர் குறிப்பிட்டார்.