அலோர் ஸ்டார், பிப் 10- அண்டை நாட்டிலிருந்து கடத்தி வரப்பட்டதாக நம்பப்படும் 45,000 வெள்ளி மதிப்புள்ள 9 கிலோ கஞ்சாவை மலேசிய கடல்சார் அமலாக்க நிறுவனம் கைப்பற்றியுள்ளது.
லங்காவி அருகே பூலாவ் டாங்லியின் வடமேற்கே 2.9 கிலோ மீட்டர் கடல் மைல் தொலைவில் மேற்கொள்ளப்பட்ட சோதனையில் இந்த போதைப் பொருள் கைப்பற்றப்பட்டதாக கெடா/பெர்லிஸ் மாநில கடல்சார் அமலாக்க நிறுவன இயக்குநர் முதலாவது அட்மிரல் ரோம்லி முஸ்தாபா கூறினார்.
நேற்றிரவு 10.25 மணியளவில் பைபர் படகொன்று தாய்லாந்திலிருந்து நாட்டு எல்லைக்குள் நுழைந்த போது ஓப் அமான் நடவடிக்கையின் ஒரு பகுதியாக அங்கு ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த அமலாக்கத் துறையினரின் படகு அதனை வழி மறித்ததாக அவர் சொன்னார்.
அமலாக்கத் துறையினரின் படகைக் கண்டதும் பைபர் படகிலிருந்தவர்கள் சாக்கு மூட்டை ஒன்றை கடலில் வீசிவிட்டு தாய்லாந்து எல்லை நோக்கி வேகமெடுத்தனர் என்றார் அவர்.
அந்த சாக்கு பையை கைப்பற்றி சோதனையிட்ட போது அதில் ஒன்பது பொட்டலங்களாக கட்டிப்பட்டிருந்த ஒன்பது கிலோ கஞ்சா இருப்பது கண்டு பிடிக்கப்பட்டது. இந்த போதைப் பொருளின் மதிப்பு 45,000 வெள்ளியாகும் என அவர் அறிக்கை ஒன்றில் தெரிவித்தார்.