ECONOMY

ஆலயங்களுக்கான மானியம் இவ்வாண்டில் 25 லட்சம் வெள்ளியாக அதிகரிக்கப்படும்- கணபதிராவ் தகவல்

ஷா ஆலம், பிப் 12- சிலாங்கூர் மாநிலத்திலுள்ள இந்து ஆலயங்களுக்கான மானியம் இவ்வாண்டு தொடங்கி 25 லட்சம் வெள்ளியாக அதிகரிக்கப்படுவதாக சமூகவியல் பொருளாதாரத் துறைக்கான ஆட்சிக்குழு உறுப்பினர் வீ.கணபதிராவ் தெரிவித்துள்ளார்.

இந்த மானியத் தொகை அதிகரிப்பு தொடர்பான சில நடைமுறைகள் முழுமை பெற்றப் பின்னர் இது குறித்த அறிவிப்பு அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படும் என்று அவர் சொன்னார்.

தொடக்கத்தில் 10 லட்சம் வெள்ளியாக இருந்த ஆலயங்களுக்கான வருடாந்திர மானியம் பின்னர் 18 லட்சம் வெள்ளியாக உயர்த்தப்பட்டு தற்போது 25 லட்சம் வெள்ளியாக அதிகரிப்பு காண்கிறது என்று அவர் குறிப்பிட்டார்.

நேற்று இங்குள்ள தாமான் ஸ்ரீ மூடா ஸ்ரீ சுவர்ண மகா மாரியம்மன் ஆலயத்தில் நடைபெற்ற சிலாங்கூர் மாநில நிலையிலான பொங்கல் விழாவுக்கு தலைமையேற்று உரையாற்றிய போது அவர் இதனைத் தெரிவித்தார்.

இது தவிர இந்திய சமூகத்திற்கான மாநில அரசின் அனைத்து உதவித் திட்டங்களும் கட்டங் கட்டமாக உயர்த்தப்பட்டுள்ளதோடு அதற்கான நிதி ஒதுக்கீடும் ஏற்றம் கண்டு வந்துள்ளது என  கோத்தா கெமுனிங் சட்டமன்ற உறுப்பினருமான அவர் சொன்னார்.

வசதி குறைந்த குடும்பங்களைச் சேர்ந்த தமிழ்ப்பள்ளி மாணவர்களுக்கு ஆண்டுக்கு 300 வெள்ளி வழங்க வகை செய்யும் பேருந்து கட்டண உதவித் திட்டத்தின் வழி கடந்த 2013ஆம் ஆண்டு 45 மாணவர்கள் மட்டுமே பயன் பெற்ற வேளையில் கடந்தாண்டு இத்திட்ட பயனாளிகள் எண்ணிக்கை 3260ஆக அதிகரித்து அதற்கான நிதி ஒதுக்கீடும் 10 லட்சம் வெள்ளியாக உயர்வு கண்டது என்றார் அவர்.

அதே போல், அரசாங்க மற்றும் தனியார் உயர்கல்விக் கூட கல்வி கட்டண உதவித் திட்டத்தில் பயன் பெறும் மாணவர்கள் எண்ணிக்கை 15லிருந்து 560 ஆக உயர்வு கண்டது. இந்த திட்டத்திற்கு செய்யப்பட்ட நிதி ஒதுக்கீடும் 25 லட்சம் வெள்ளியாக உயர்ந்தது என அவர் சொன்னார்.

தமிழ்ப்பள்ளிகளுக்கான உதவி நிதியையும் 40 லட்சம் வெள்ளியிலிருந்து 50 லட்சம் வெள்ளியாக அதிகரித்துள்ளோம். இவை யாவும் கடந்த 2007ஆம் ஆண்டில் ஹிண்ட்ராப் போராட்டத்தின் வாயிலாக நாம் ஒற்றுமையின் வழி கிடைத்த அனுகூலங்களாகும் என்று அவர் குறிப்பிட்டார்.

தாம் மாநில ஆட்சிக்குழு உறுப்பினராக தாம் பொறுப்பு வகிப்பது இதுவே இறுதி தவணையாக இருக்கலாம் எனக் கூறிய கணபதிராவ், அடுத்து இந்த பதவிக்கு வரும் தலைவர்கள் இந்த உரிமைகள் அனைத்தையும் தொடர்ந்து கட்டிக்காக்க வேண்டும் என வலியுறுத்தினார்.


Pengarang :