ஜோகூர் பாரு, பிப் 20- மனநல ஆரோக்கியம் அதிகம் பாதிக்கப்படும் அபாயம் உள்ள தரப்பினராக இளையோரும் சிறார்களும் உள்ளனர். எனினும் இந்த விவகாரம் மீது இன்னும் குறைவாகவே கவனம் செலுத்தப்படுகிறது.
சிறாராக இருந்து இளையோராக மாறும் கட்டம் உடல், மனோரீதியாகவும் முதிர்ச்சி நிலையிலும் உணர்வுகளைக் கையாள்வதிலும் அவர்களுக்கு கடுமையான சவாலை உருவாக்குவதாக சுகாதார அமைச்சர் டாக்டர் ஜலிஹா முஸ்தாபா கூறினார்.
இக்காலக்கட்டத்தில் குழப்பத்திற்கு ஆளாகும் அவர்கள் வழிதவறிச் செல்வதோடு சமூக ஒருங்கமைப்பு க்குள் தங்களை இணைத்துக் கொள்ளவும் தவறி விடுகின்றனர் என்று அவர் தெரிவித்தார்.
தாங்கள் எதிர்கொள்ளும் மன அழுத்தத்தில் இருந்து விடுபடுவதற்காக தங்களைத் தாங்களே துன்புறுத்திக் கொள்ளும் செயலில் ஈடுபடுவது சிகிச்சைக்கு வரும் இளையோரிடம் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகள் காட்டுகின்றன என்று அவர் சொன்னார்.
இத்தகைய செயல்கள் அவர்களை வெட்கப்பட வைக்கின்றன. பிரச்னைகளுக்குத் தீர்வு காண்பதற்கான பக்குவம் இல்லாத நிலையில் சொந்தப் பிரச்னைகளில் தாங்களாகவே சிக்கிக் கொள்கின்றனர் என்றார் அவர்.
இங்குள்ள இரிஸ் பெர்மாய் மருத்துவமனையில் சிறார் மற்றும் இளையோர் மனநல வார்டை திறந்து வைத்து உரையாற்றுகையில் அவர் இதனைத் தெரிவித்தார்.
பெரியவர்களுக்கு மட்டுமே மனநல பாதிப்பு ஏற்படும் என்ற கருத்து பரவலாக உள்ளது. சிறுவர்கள் மத்தியிலும் இப்பிரச்சனை உள்ளது. ஆனால், இந்த தரப்பினர் மீது குறைவான கவனமே செலுத்தப்படுகிறது என அவர் குறிப்பிட்டார்.