ஷா ஆலம், பிப் 20- உலு சிலாங்கூர் மாவட்டத்திலுள்ள ஒன்பது பள்ளிகளைச் சேர்ந்த 1,892 எஸ்.பி.எம். மாணவர்கள் எழுது பொருள்களைப் பெற்றனர்.
தீபகற்ப மலேசிய மலாய் மாணவர் சம்மேளனத்தின் உலு சிலாங்கூர் பிரிவு, பத்தாங் காலி தொகுதி சேவை மையம் மற்றும் எம்.பி.ஐ. எனப்படும் சிலாங்கூர் மந்திரி புசார் கழகம் ஆகிய தரப்பினரின் ஆதரவில் இந்நிகழ்வுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
நேற்று பத்தாங் காலி, ஓவாசிஸ் பத்தாங் காலியில் நடைபெற்ற உலு சிலாங்கூர் மாவட்ட நிலையிலான ஜெலாஜா கித்தா சிலாங்கூர் பென்யாயாங் நிகழ்வின் போது சம்பந்தப்பட்ட மாணவர்களுக்கு இந்த உபகரணங்கள் பகிர்ந்தளிக்கப்பட்டன.
இன்று தொடங்கி எஸ்.பி.எம். தேர்வு எழுதவிருக்கும் மாணவர்களுக்கு உற்சாகமூட்டும் வகையில் இந்த திட்டம் அமல்படுத்தப்படுவதாக பத்தாங் காலி தொகுதி சட்டமன்ற ஒருங்கிணைப்பாளர் சைபுடின் ஷாபி முகமது கூறினார்.
தேர்வுக்கு தங்கள் பிள்ளைகளைத் தயார் செய்யும் பெற்றோர்களின் சுமையை ஓரளவு குறைப்பதில் இந்த திட்டம் துணை புரியும் என்று தாங்கள் நம்புவதாகவும் அவர் தெரிவித்தார்.
இந்த திட்டத்தில் பங்கேற்று பள்ளி உபகரணங்களைப் பெற்றுக் கொண்ட அனைத்து மாணவர்களுக்கும் எங்களின் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறோம் என அவர் இன்று வெளியிட்ட அறிக்கை ஒன்றில் சொன்னார்.