கோலாலம்பூர், மார்ச் 12 - மோசமான நிலையில் இருக்கும் தமிப்பள்ளிகளை சீரமைக்க கல்வி அமைச்சிடம் மானியம் பெறுவதற்கு தமிழ்ப்பள்ளிகள் விண்ணப்பிக்கலாம் என கல்வி துணையமைச்சர் லிம் ஹுய் இங் தெரிவித்தார். இந்திய அரசு சார்பற்ற இயங்கங்கள் தமிழ்க் கல்வி மற்றும் தமிழ்ப் பள்ளிகளின் மேம்பாட்டிற்காக முன்னெடுக்கும் திட்டங்களுக்கு உதவுவதற்கும் தாம் தயாராய் இருப்பதாக அவர் கூறினார். மலாயா பல்கலைக்கழத்தில் தமிழ் அறவாரியத்தின் ஏற்பாட்டில் நேற்று நடைபெற்ற தமிழ்ப் பள்ளி மேலாளர் வாரியத்தின் 3-ஆவது தேசிய மாநாட்டைத் தொடக்கி வைத்தப் பின்னர் அவர் அதனைத் தெரிவித்தார். முன்னதாக , அந்நிகழ்ச்சியில் உரையாற்றிய துணையமைச்சர், தமிழ் அறவாரியத்திற்கு தமது சொந்த நன்கொடையாக 10,000 ரிங்கிட் உதவித் தொகையை வழங்குவதாகவும் அறிவித்தார். இதனிடையே, தமிழ்ப் பள்ளிகள் தொடர்பான பிரச்சனைகளை அரசாங்கத்தின் கவனத்திற்கு கொண்டுச் செல்வதற்காக அதிகாரப்பூர்வ அமைப்பாக தமிப்பள்ளி மேலாளர் தற்காலிக குழு ஒன்று அமைக்க திட்டமிட்டிருப்பதாக தமிழ் அறவாரிய பொறுப்பாளர் சி. ம. திரவியம் தெரிவித்தார். மலாயா பல்கலைக்கழத்தில் நடைபெற்ற தமிழ்ப் பள்ளி மேலாளர் வாரியத்தின் 3-ஆவது தேசிய மாநாட்டில் நாடு முழுவதுமுள்ள தமிழ்ப் பள்ளிகளின் மேலாளர் வாரிய தலைவர்களும் பிரதிநிதிகளும் கலந்து கொண்டனர்.