MEDIA STATEMENTSELANGOR

பெட்ரோனாஸ் கே.எல்.சி.சி. இரட்டைக் கோபுரத்தை சிலாங்கூர் சுல்தான் பார்வையிட்டார்

ஷா ஆலம், மார்ச் 23- தலைநகரில் வீற்றிருக்கும் பெட்ரோனாஸ் கே.எல்.சி.சி. இரட்டைக் கோபுரத்தை மேன்மை தங்கிய சிலாங்கூர் சுல்தான் இம்மாதம் 21ஆம் தேதி பார்வையிட்டார்.

உலகின் மிக உயரிய அந்த இரட்டைக் கோபுரத்திற்கு முதன் முறையாக வருகை மேற்கொண்ட சல்தான் ஷராபுடின் இட்ரிஸ் ஷா அல்ஹாஜ் அவர்களை பெட்ரோனாஸ் தலைவர் டான்ஸ்ரீ முகமது பாக்கே சாலே மற்றும் எம்.ஆர்.சி.பி. நிறுவனத்தின் உதவி நிர்வாகத் தலைவர் டான்ஸ்ரீ முகமது சலீம் பாத்தே டின் ஆகியோர் வரவேற்றனர்.

அந்த இரட்டைக் கோபுரத்தின் 41வது மாடியில் அமைந்துள்ள இரு கட்டிடங்களையும் இணைக்கும் ஏரோபிரிட்ஜில் இருந்தவாறு கோலாலம்பூர் மாநகரின் அழகை ரசித்த அவர், பின்னர் 81வது மாடியில் உள்ள முகமது பாக்கேயின் அலுவலகத்திற்குச் சென்றார்.

அந்த இரட்டைக் கோபுரத்தின் தற்போதைய நடவடிக்கைகள் மற்றும் அனைத்துலக சுற்றுலாத் தலமாக விளங்கும் இக்கட்டிடத்தின் எதிர்காலத் திட்டங்கள் குறித்து சுல்தானுக்கு அங்கு விளக்கமளிக்கப்பட்டதாக சிலாங்கூர் அரச அலுவலகத்தின் பேஸ்புக் பதிவில் கூறப்பட்டுள்ளது.


Pengarang :