பத்து பஹாட் மார்ச் 26- ஜோகூர் மாநிலத்தில் வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட ஒரே மாவட்டமாக பத்து பஹாட் இன்னும் இருந்து வருகிறது. இம்மாவட்டத்தில் உள்ள இரு துயர் துடைப்பு மையங்களில் 37 குடும்பங்களைச் சேர்ந்த 141 பேர் தங்கியுள்ளனர்.
இம்மாவட்டத்தில் இன்று காலை 8.00 மணி நிலவரப்படி இரு வெள்ள நிவாரண மையங்கள் மட்டுமே செயல்பட்டு வருவதாக மாநில பேரிடர் மேலாண்மை செயல்குழு கூறியது.
யோங் பெங் சமூக மண்டபத்தில் உள்ள துயர் துடைப்பு மையத்தில் 22 குடும்பங்களைச் சேர்ந்த 79 பேரும் ஸ்ரீ மேடான் தேசிய பள்ளியில் செயல்படும் துயர் துடைப்பு மையத்தில் 15 குடும்பங்களைச் சேர்ந்த 62 பேரும் தங்கவைக்கப்பட்டுள்ளதாக அது தெரிவித்தது.
யோங் பெங் வட்டாரத்தின் கம்போங் பாரிட் லாப்பிஸ் பங்சா, கம்போங் ஜாலான் லாமா, தாமான் மெலுர், கம்போங் பாரிட் அமில், தாமான் டேசா சூரியா ஆகிய குடியிருப்புப் பகுதிகள் வெள்ளத்தில் தொடர்ந்து பாதிக்கப்பட்டுள்ளதாக அச்செயல்குழு வெளியிட்ட அறிக்கை ஒன்று கூறியது.
ஜோகூர் மாநிலத்தின் அனைத்து 10 மாவட்டங்களிலும் இன்று காலை வானிலை தெளிவாக க் காணப்படுகிறது.