ALAM SEKITAR & CUACAANTARABANGSA

ஈரானில் ஏற்பட்ட பூகம்பத்தில் 239 பேர் காயம்

தெஹ்ரான், மார்ச் 26- ஈரானின் வடமேற்குப் பகுதியை ரிக்டர் அளவில் 5.6 எனப் பதிவான நிலநடுக்கம் நேற்று முன்தினம் காலை உலுக்கியது. இந்த நிலநடுக்கத்தில் காயமுற்றவர்களின் எண்ணிக்கை 239ஆக உயர்ந்துள்ளதாக இஸ்னா செய்தி நிறுவனத்தை மேற்கோள் காட்டி ஷின்ஹூவா செய்தி வெளியிட்டுள்ளது.

இந்த நிலநடுக்கம் உள்நாட்டு நேரப்படி அதிகாலை 6.46 மணிக்கு அஸர்பைஜான்  பிரதேசத்தின் கோய் மாவட்டத்தை உலுக்கியதாக ஈரானின் புவிஅறிவியல் மையம்  கூறியது. 

இந்த பூகம்பத்தில் காயமுற்றவர்களில்  50 பேர் கோய் மாவட்டத்தையும் எஞ்சியோர் சல்மாஸ் மாவட்டத்தையும் சேர்ந்தவர்களாவர் என்று ஈரானின் உதவி மற்றும் மீட்பு அமைப்பின் தலைவர் சடேக் மாஹ்முடின் தெரிவித்தார்.

காயமடைந்தவர்களில் 219 பேர் சிகிச்சைக்குப் பின்னர் வீடு திரும்பிய வேளையில் மேலும் 20 பேருக்கு மருத்துவமனைகளில் தொடர்ந்து சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது என அவர் குறிப்பிட்டார்.

நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு தற்காலிக கூடாரங்கள் மற்றும் போர்வைகள் அனுப்பப்பட்டதாக அவர் மேலும் சொன்னார்.

இதே கோய் நகரை ரிக்டர் அளவில் 5.9 எனப்பதிவான நிலநடுக்கம் கடந்த ஜனவரி மாதம் தாக்கியது. இந்த பேரிடரில் மூவர் உயிரிழந்ததோடு 800க்கும் மேற்பட்டோர் காயமுற்றனர்.


Pengarang :