கோலாலம்பூர், ஏப் 5- தனது முன்னாள் மனைவியின் ஒப்புதலின்றி மூன்று பிள்ளைகளை கடத்திச் சென்று முஸ்லீம்களாக கட்டாய மதமாற்றம் செய்ததாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ள ஆடவர் நீதிமன்றத்தை அவமதித்த குற்றத்துக்காக இங்குள்ள உயர்நீதிமன்றத்தால் 20,000 வெள்ளி அபராதம் விதிக்கப்பட்டார்.
லோ சியு ஹொங் எனும் மாதுவின் முன்னாள் கணவரான முகமது நாகேஸ்வரன் முனியாண்டி என்ற அந்த ஆடவர் 14 நாட்களுக்குள் இந்த அபராதத் தொகையை செலுத்த வேண்டும் என்றும் தவறினால் 14 நாள் சிறைத் தண்டனையை அனுபவிக்க வேண்டும் என்றும் நீதிபதி எவ்ரோல் மரித்தி பீட்டர்ஸ் தனது தீர்ப்பில் கூறினார்.
நீதிபதியின் பணியில் முகமது நாகேஸ்வரன் தலையிட்டுள்ளதாக நீதிபதி தனது தீர்ப்பில் கூறினார். தன் முன்னாள் கணவருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க திருமதி லோவுக்கு அனுமதி வழஙகியப் பின்னர் நீதிபதி இவ்வாறு தெரிவித்தார்.
இரட்டையர்களான 15 வயது மகள்கள் மற்றும் 11 வயது மகன் ஆகியோரை பராமரிப்பதற்கு நீதிமன்றம் கடந்த 2021 மார்ச் 31ஆம் தேதி வழங்கிய ஏகபோக உரிமையை தன் முன்னாள் கணவர் மீறி விட்டதாக கூறி லோ இந்த வழக்கைத் தொடுத்திருந்தார்.
இந்த வழக்கிற்கான செலவுத் தொகையான 6,000 வெள்ளியையும் முகமது நடேஸ்வரன் செலுத்த வேண்டும் என நீதிபதி உத்தரவிட்டார்.