ECONOMY

சபா, சரவாவுக்கு கூடுதல் விமானக் கட்டணம்- தீர்வுக்கான வழிகளை அரசு ஆராய்கிறது

சிப்பாங், ஏப் 21- பெருநாள் காலங்களின் போது குறிப்பாக சபா, சரவா ஆகிய மாநிலங்களுக்கு விதிக்கப்படும் அதிகப்படியான விமானக் கட்டணப் பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்கான வழிகளை அரசாங்கம் ஆராய்ந்து வருகிறது.

இவ்விவகாரத்திற்கு தீர்வு காண்பதற்கான முழு அதிகாரத்தையும் பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் கடந்த அமைச்சரவைக் கூட்டத்தின் போது தமக்கு வழங்கியதாக போக்குவரத்து அமைச்சர் அந்தோணி லோக் கூறினார்.

நோன்புப் பெருநாள் மட்டுமின்றி சீனப் புத்தாண்டு, காவாய் போன்ற பெருநாட்களின் போதும் நிலவும் இனப்பிரச்சினைக்குத் தீர்வு காண்பதற்கான முயற்சியில் அமைச்சு ஈடுபட்டு வருகிறது என அவர் குறிப்பிட்டார்.

இந்த பிரச்சினைக்குத் தீர்வு காண்பதற்காக கடந்த இரு மாதங்களாக பல்வேறு திட்டங்கள் பேச்சுவார்த்தைகளும் நடத்தப்பட்டு வந்தன என்று அவர் சொன்னார்.

கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலையத்தின் இரண்டாவது முனையத்தில் விமானப் பயணிகளுக்கு நோன்புப் பெருநாள் அன்பளிப்புகளை வழங்கியப் பின்னர் செய்தியாளர்களிடம் அவர் இவ்வாறு தெரிவித்தார்.

பெருநாள் காலங்களின் போது மட்டுமின்றி விடுமுறையின் போதும் சொந்த ஊர்களுக்குச் செல்லும் மாணவர்களுக்கு உதவுவதற்கான திட்டங்களையும் அமைச்சு வகுத்து வருவதாக அவர் மேலும் கூறினார்.

அரசாங்க உயர் கல்விக் கூட மாணவர்களை இலக்காக கொண்டு இந்த திட்டத்தை அமல்படுத்த விருக்கிறோம். உயர்கல்வி அமைச்சின் உதவியோடு அம் மாணவர்களை அடையாளம் காணப்படுவர் என்றார் அவர்.


Pengarang :