MEDIA STATEMENTNATIONAL

முகமுடியணிந்த கொள்ளையர்கள் கைவரிசை- ஏழு கிலோ தங்கம் கண நேரத்தில் பறிபோனது

கோலபிலா, மே 4- முகமூடியணிந்த இரு கொள்ளையர்கள் நகை விநியோகிப்பாளர்களிடமிருந்து 18 லட்சம் வெள்ளி மதிப்புள்ள ஏழு கிலோ தங்கத்தை கணநேரத்தில் பறித்துச் சென்றனர்.

இந்த துணிகரக் கொள்ளைச் சம்பவம் நுர் ஜன்னா நகைக்கடையின் பின்புறச் சாலையில் நேற்று காலை நிகழ்ந்தது.

காலை 11.37 மணியளவில் நிகழ்ந்த இந்த கொள்ளைச் சம்பவத்தை சித்தரிக்கும் காணொளி நேற்று பிற்பகல் 1.00 மணி முதல் சமூக ஊடங்களில் பரவலாக பகிரப்பட்டு வருகிறது.

கையில் பாராங்கத்தியேந்திய அவ்விரு முகமூடிக் கொள்ளையர்களும் தங்க விநியோகிப்பாளர்கள் இருவரிடமிருந்த தங்கம் அடங்கிய பையை பறித்துக் கொண்டு டோயோட்ட அல்டிஸ் மற்றும் டோயோட்ட கேம்ரி கார்களில் ஏறித் தப்பிச் செல்வதை அந்த காணொளிக் காட்சி சித்தரிக்கிறது.

இதனிடையே, இந்த கொள்ளைச் சம்பவம் தனது கடைக்கு வெளியே நிகழ்ந்த தாக நுர் ஜன்னா கோல பிலா நகைக்கடையின் நிர்வாகியான நுர்ஹஸ்லிசா அப்துல் ரஹ்மான் கூறினார்.

இந்த சம்பவம் குறித்து சம்பந்தப்பட்ட நகை விநியோகிப்பாளர்கள் எங்களிடம் தெரிவித்தனர். இச்சம்பவம் கடையின் கண்காணிப்பு கேமராவிலும் பதிவாகியுள்ளது. இச்சம்பவம் தொடர்பில் போலீசிலும் புகார் செய்யப்பட்டு விட்டது என அவர்  தெரிவித்தார்.


Pengarang :