ஷா ஆலம், மே 11- ஷா ஆலம் மாநகர் மன்றத்தின் ஏற்பாட்டிலான நடமாடும் முகப்பிடச் சேவை இங்குள்ள செக்சன் 9, பிளாசா மசாலாம் கார் நிறுத்துமிடத்தில் வரும் சனிக்கிழமை நடைபெறவுள்ளது. ஷா ஆலம் ஒன் வீல்ஸ் எனும் நிகழ்வு காலை 11.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை நடைபெறும் என்று மாநகர் மன்றத்தின் வர்த்தக மற்றும் பொது உறவுப் பிரிவுத் தலைவர் ஷாரின் அகமது கூறினார். பொது மக்கள் மாநகர் மன்ற அலுவலகங்களுக்கு வரவேண்டிய அவசியமின்றி வார இறுதி நாட்களில் தங்கள் அலுவல்களை கவனிப்பதற்கு ஏதுவாக இந்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக அவர் அறிக்கை ஒன்றில் சொன்னார். மதிப்பீட்டு வரியை சரி பார்த்து செலுத்துவது, கார் நிறுத்துமிட அபராதங்களைச் செலுத்துவது, புகார்களைத் தெரிவிப்பது போன்ற நோக்கங்களுக்கு பொது மக்கள் இந்த சேவையைப் பயன் படுத்திக் கொள்ளலாம் என்று அவர் தெரிவித்தார். இந்த சேவை மக்களுக்கு பயன் தரக்கூடியதாக அமையும் என்று தாங்கள் எதிர்பார்ப்பதாக அவர் மேலும் குறிப்பிட்டார்.
![](https://selangorkini.my/ta/wp-content/uploads/2023/05/MBSAKaunter-960x640.jpg)