நாட்டிற்கு இழப்பை ஏற்படுத்திய ஊழல்களில் தொடர்புடையவர்களுக்கு எதிராக விசாரணை- பிரதமர் உத்தரவு

கோலாலம்பூர், மே 13- ஊழல் நடவடிக்கைகள் காரணமாக நாட்டிற்கு இழப்பு ஏற்படக் காரணமாக இருந்தவர்களுக்கு எதிராக விசாரணை மேற்கொள்ளும்படி அமலாக்கத் தரப்பினருக்கு குறிப்பாக மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்திற்கு பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் உத்தரவிட்டுள்ளார்.

சட்ட அம்சங்களுக்கு உட்பட்டு அனைத்து விதமான நடவடிக்கைகளையும் எடுக்கும்படி எஸ்.பி.ஆர்.எம். தவிர்த்து மலேசிய வருமான வரி வாரியம், பேங்க் நெகாரா, அரச மலேசிய போலீஸ் படையின் வர்த்தக குற்றப் புலனாய்வுத் துறை உள்ளிட்ட துறைகளுக்கும் உத்தரவிடப்பட்டுள்ளதாக அன்வார் சொன்னார்.

 நான் ஊழலுக்கு எதிராக குரல் கொடுக்க முடியும். ஆனால் பொதுவான உத்தரவை வழங்க முடியுமே தவிர ஒவ்வொன்றாக விளக்கிக் கொண்டிருக்க முடியாது. ஒரு சிலர் கோடிக்கணக்கில் கொள்ளையடித்து விட்டு பல ஆண்டுகளாக பாதுகாப்பாக இருக்கின்றனர். யாராலும் அவர்களைத் தொட முடியவில்லை என்ற அன்வார் குறிப்பிட்டார்.

நாட்டிற்கும் சட்டத் திட்டங்களுக்கு அர்த்தமே இல்லாமல் போய்விட்டது. போலீஸ் மற்றும் உள்நாட்டு வருமான வரி வாரியத்திற்கு நாம் உத்தரவிட்டால் கீழே உள்ளவர்கள் சிக்குகிறார்கள். மேலே உள்ள கும்பல்கள் கோடிக் கணக்கான பணத்துடன் தப்பி விடுகின்றன. அதனால்தான் இந்த உத்தரவை நான் பிறப்பித்துள்ளேன். அரசியல் சித்தாந்தம் மற்றும் இன வேறுபாடின்றி அனைவரும் எனது இந்த நடவடிக்கையை வரவேற்பார்கள் என எதிர்பார்க்கிறேன் என்றார் அவர்.

இன்று இங்குள்ள டத்தாரான் மெர்டேக்காவில் மலேசியா மடாணி நோன்புப் பெருநாள் பொது உபசரிப்பில் கலந்து கொண்டப் பின்னர் செய்தியாளர்களிம் அவர் இதனைத் தெரிவித்தார்

ஊழல் மற்றும் வீண் விரயம் காரணமாக கடந்த 26 ஆண்டுகளில் நாடு 4.5 ட்ரிலியன் வெள்ளி இழப்பை அடைந்துள்ளதாக இ.எம்.ஐ.ஆர். ரிசேர்ச் ஆய்வு நிறுவனம் கூறியுள்ளது குறித்து கேட்கப்பட்ட கேள்விக்கு அன்வார் இவ்வாறு பதிலளித்தார்.


Pengarang :