ஷா ஆலம், ஜூன் 11- இந்திய சமூகத்தில் குறிப்பாக இந்துக்கள் மத்தியில் மிகப்பெரிய விவகாரமாக இருந்து வரும் மதமாற்றப் பிரச்சனைக்குத் தீர்வு காண சமயம் மீதான பற்றுதலை நாம் அதிகரிக்க வேண்டும் என்று ஈப்போ பாராட் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.குலசேகரன் வலியுறுத்தினார்.
இந்த விஷயத்தில் அரசாங்கத்தை குறை கூறுவதால் எந்த பயனும் இல்லை. நமது மதம் மீது ஆழ்ந்த பற்றுதல் இருக்கும் பட்சத்தில் மதமாற்றம் நிகழ்வதற்கு வாய்ப்பே இல்லை என்று அவர் சொன்னார்.
நம்மைச் சுற்றி உள்ளவர்கள் மத்தியில் நிறைய மத மாற்றங்கள் நிகழ்ந்து கொண்டுதான் இருக்கிறது. நாம் மதத்தின் மீது உறுதியாக இல்லாத பட்சத்தில் இத்தகைய சம்பவங்களுக்கு பிறரைக் குறை கூறி பயனில்லை என்றார் அவர்.
மலேசிய இந்திய பல்கலைக்கழக பட்டதாரிகள் சங்கத்தின் ஏற்பாட்டில் நேற்று இங்குள்ள மிட்லண்ட்ஸ் மாநாட்டு மையத்தில் நடைபெற்ற “மலேசியா மடாணி- இந்திய அரசியல் முன்நகர்வு“ எனும் ஆய்வரங்கில் உரையாற்றிய போது அவர் இவ்வாறு தெரிவித்தார்.
இந்த மத மாற்றப் பிரச்சனைக்குத் தீர்வு காண்பதற்கான நடவடிக்கைகள் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் குலசேகரன் குறிப்பிட்டார்.
இளம் வயது பிள்ளைகளை மதம் மாற்றுவதற்கு தந்தை அல்லது தாயாரின் அனுமதி தேவை என்ற ஷரத்தை தாய் மற்றும் தந்தை என மாற்றுவதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
இந்த சட்டத்திருத்தம் மீதான பிரேரணை அடுத்த நாடாளுமன்றக் கூட்டத் தொடரில் தாக்கல் செய்யப்படும். இந்த பிரேரணை சட்டமாக்கப்படுவதற்கு மூன்றில் இரண்டு பெரும்பான்மை உறுப்பினர்களின் ஆதரவு தேவை-
பெரும்பான்மை வாக்குகளில் இந்த சட்டம் திருத்தப்படும் என நாங்கள் பெரிதும் நம்புகிறோம். இது சாத்தியமாகும் பட்சத்தில் மத மாற்றப் பிரச்சனைக்கு தீர்வு ஏற்படுவதற்கான சாத்தியம் உண்டாகும் என அவர் சொன்னார்.