MEDIA STATEMENTNATIONAL

எல்.பி.டி.2 நெடுஞ்சாலையில் கோர விபத்து- தம்பதியர் மரணம், இரு பிள்ளைகள் படுகாயம்

கோல திரங்கானு,  ஜூன் 18- ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நால்வர் பயணம் செய்த கார் கட்டுப்பாட்டை இழந்து கவிழ்ந்ததில் கணவன் மனைவி உயிரிழந்ததோடு இரு பிள்ளைகள் பலத்த காயங்களுக்கு உள்ளாயினர். இச்சம்பவம் கிழக்குக்கரை (எல்.டி.பி.2)  நெடுஞ்சாலையின் 267.2 கிலோ மீட்டரில் கெமாமான்ஜாபோர் செல்லும் பகுதியில் நேற்று நிகழ்ந்தது.

நேற்று மாலை 4.00 மணி அளவில் நிகழ்ந்த இந்த விபத்தில் முகமது ரிடுவான் முகமது யாக்கோப் (வயது 35) மற்றும் அவரின் மனைவி ஜஹிடா  அனிஷா முகமது (வயது 35) ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

அத்தம்பதியரின் இரு பிள்ளைகளான முகமது உவாய்ஸ் (வயது 8) மற்றும்  ரௌட்ஹாதுல் காரியா (வயது 3) ஆகியோர்  கடுமையான காயங்களுக்கு உள்ளாயினர்.

இந்த விபத்து தொடர்பில் நேற்று மாலை 4.14 மணியளவில் தாங்கள் தகவலை பெற்றதாக திங்கானு மாநில தீயணைப்பு மற்றும் மீட்பு துறையின் நடவடிக்கை மையத்தின் பேச்சாளர் கூறினார்.

செனா தீயணைப்பு நிலையத்தைச் சேர்ந்த எண்மர்  அடங்கிய தீயணைப்பு குழுவினர் இரு வாகனங்களில் சம்பவ இடத்திற்கு விரைந்ததாக அவர் குறிப்பிட்டார்.

இந்த விபத்தில் இதர வாகனங்கள் சம்பந்தப்படவில்லை என்றும் விபத்துக்கான காரணம் கண்டறியப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்தார்.

இறந்தவர்களின் உடல்கள் மேல் நடவடிக்கைக்காக போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்ட வேளையில் காயம் அடைந்த இரு சிறுவர்களும் கெமாமான் மற்றும் குவாந்தான் மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.


Pengarang :