MEDIA STATEMENT

கட்டுப்பாட்டை இழந்த மோட்டார் சைக்கிள்கள் லோரியை மோதின- இரு பெண்கள் பலி

ஜோகூர் பாரு, ஜூன் 18-  கட்டுப்பாட்டை இழந்த இரு மோட்டார் சைக்கிள்கள் எதிரே வந்த லோரியுடன்  மோதியதில் இரு பெண்கள் உயிரிழந்தனர். இச்சம்பவம் கூலாய், ஜாலான் கூனோங் பூலாயில் நேற்று நண்பகல் 12.00 மணியளவில் நிகழ்ந்தது.

மழையின் காரணமாக சாலை வழுக்கலாக இருந்ததால் இவ்விபத்து நிகழ்ந்திருக்கலாம் என சந்தேகிக்கப் படுவதாக கூலாய் மாவட்ட இடைக்கால போலீஸ் தலைவர் சூப்ரிடெண்டன் யூசுப் ஓத்மான் கூறினார்.

யமஹா ரக மோட்டார் சைக்கிளை ஓட்டிய 36 வயது பெண் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த வேளையில் அதே யமஹா ரக மோட்டார் சைக்கிளோட்டியான 38 வயதுடைய மற்றொரு பெண் மருத்துவமனையில் சிகிச்சை பெறும் போது மரணமுற்றதாக அவர் தெரிவித்தார்.

அச்சாலையின் வளைவான பகுதியை அடைந்த போது கட்டுப்பாட்டை இழந்த அவ்விரு மோட்டார் சைக்கிளோட்டிகளும் எதிர்த்தடத்தில் வந்து கொண்டிருந்த வோல்வோ ரக  லோரியுடன் மோதினர் என்றார் அவர்.

கடுமையான காயங்களுக்குள்ளான 36 வயது பெண் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த வேளையில் 38 வயதுப் பெண் கூலாய், தெமெங்கோங் ஸ்ரீ மகாராஜா துன் இப்ராஹிம் மருத்துவமனையில் சிகிச்சை பெறும் போது மரணமுற்றார் என்று அவர்  மேலும் சொன்னார்.

லோரின் ஓட்டுநரான 39 வயது ஆடவருக்கு இந்த சம்பவத்தில் காயம் எதுவும் ஏற்படவில்லை என தெரிவித்த அவர், இந்த விபத்து தொடர்பாக 1987ஆம் ஆண்டு சாலை போக்குவரத்துச் சட்டத்தின் 41(1) பிரிவின் கீழ் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்றார்.


Pengarang :