ALAM SEKITAR & CUACAHEALTH

மனநல சிகிச்சைக்கு உகந்த சூழியல் முறையை மாநில அரசு தயார் செய்துள்ளது

ஷா ஆலம், ஜூலை 2- மக்களின் மனநலம் தொடர்பான பிரச்சனைகளுக்கு சிகிச்சை அளிப்பதற்கு  மாநில அரசு முழுமையான சூழியல் முறையை தயார் செய்துள்ளது.

மனநலம் சார்ந்த பிரச்சனைகளை எதிர் நோக்குவோருக்கு உதவும் நோக்கில் சிலாங்கூர் மெண்டல் சே ஹாட் (சேஹாட்) திட்டத்தை மாநில அரசு அமல்படுத்தியுள்ளதாக பொது சுகாதாரத் துறைக்கான ஆட்சிக்குழு உறுப்பினர் டாக்டர் சித்தி மரியா மாமுட் கூறினார்.

இந்த சே ஹாட் திட்டத்தின் வாயிலாக பொது மக்கள் செலங்கா செயலியைப் பயன்படுத்தி தங்களைச் சுயமாக சோதனை செய்து கொள்ள முடியும். இரண்டு அல்லது மூன்று வாரங்களுக்கு தொடர்ச்சியாக சோதனை செய்து கொள்வதன் மூலம் தங்களுக்கு மன உளைச்சல், அயர்ச்சி, மனச் சிதைவு போன்ற பிரச்சனைகள் உள்ளதா என்பதைக் கண்டறிய முடியும் என அவர் சொன்னார்.

இத்தகைய பிரச்சனைகள் அன்றாட வாழ்க்கையில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தக் கூடும்.  தொடர்ச்சியாக சோதனை மேற்கொள்வதன் மூலம் தங்களின் மன நலம் குறித்து அவர்கள் அறிந்து கொள்ள இயலும் என்றார் அவர்.

நேற்று இங்குள்ள தெராத்தாக் ஷா போண்டாவில் நேரடியாக ஒளிபரப்பப்பட்ட  பாகி மலேசியாவின் சிறப்பு நேர்காணல் நிகழ்வில் அவர் இதனைத் தெரிவித்தார்.

முதல் நிலை சோதனையில் மனநலம் தொடர்பான 60 பயிற்சி காணொளிகளை காண்பதற்குரிய வாய்ப்பு சம்பந்தப்பட்டவர்களுக்கு வழங்கப்படும். தற்கொலை செய்து கொள்ள வேண்டும் என்ற எண்ணம் உள்ளிட்ட பிரச்சனைகளைக் கொண்டவர்களுக்கு  ஆலோசகர்கள்  மூலம் உரிய ஆலோசக சேவை வழங்கப்படும் என்றார் அவர்.

இதுவரை மனநலம் தொடர்பான 200 பேருக்கு தனது தரப்பு சிகிச்சை அளித்து உள்ளதாக கூறிய அவர், மனநல அல்லது மனோவியல் நிபுணர்களின் வழிகாட்டலில் ஐந்து முறை சிகிச்சை பெறுவதற்கு வாய்ப்பும் அவர்களுக்கு வழங்கப்படும் என்றார்.


Pengarang :