புத்ரா ஜெயா, ஜூலை 8- தமிழ் மொழியின் பெருமையை பறைசாற்றும் நோக்கில் தனிநாயகம் உள்ளிட்ட தமிழ் அறிஞர்களின் பெரும் முயற்சியால் உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாடு கடந்த 1966ம் ஆண்டு முதல் தொடர்ந்து நடத்தப்பட்டு வருகிறது.
இந்த மாநாட்டின் மூலம் உலகத்தில் உள்ள அனைத்து தமிழ் அறிஞர்களும் ஆராய்ச்சிகளை வெளிப்படுத்துகின்றனர்.
2 ஆண்டுகளுக்கு ஒரு முறை இந்த மாநாடு நடத்தப்பட்டு வருகிறது. இதுவரை 10 உலக தமிழ் ஆராய்ச்சி மாநாடுகள் நடைபெற்றுள்ளது. 11 ஆவது உலக தமிழ் ஆராய்ச்சி மாநாடு ஷார்ஜாவில் நடைபெறும் என்று முதலில் அறிவிக்கப்பட்டது.
கோவிட்-19 உள்ளிட்ட காரணத்தால் உலக தமிழ் ஆராய்ச்சி மாநாடு நிகழ்வு நிறுத்தப்பட்டது. அதனை தொடர்ந்து 11 ஆவது உலக தமிழ் ஆராய்ச்சி மாநாடு நடைபெறும் இடமும் மாற்றப்பட்டுள்ளது.
அதன்படி 11ஆ வது உலக தமிழ் ஆராய்ச்சி மாநாடு மலேசியாவில் ஜூலை 21 ஆம் தேதி முதல் 23 ஆம் தேதி வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மொத்தம் 3 நாட்கள் நடைபெறும் மாநாட்டில் 100 நாடுகளை சேர்ந்த சுமார் 2,000 பேராளர்கள் மற்றும் 1,000 பேராளர்கள் பங்கேற்கிறார்கள் என்று மனிதவள அமைச்சரும் உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாட்டின் தலைவருமான வ. சிவகுமார் தெரிவித்தார்.
மலாயா பல்கலைக்கழகத்தில் நடைபெறும் இந்த மாநாட்டில் மலேசிய, இந்தியா, சிங்கப்பூர், மொரிசியஸ், இலங்கை, பிரான்ஸ், கனடா, பிரிட்டன், அமெரிக்கா, தென் ஆப்பிரிக்கா போன்ற நாடுகளில் இருந்து அறிஞர்கள், கவிஞர்கள் ஊடகவியலாளர்கள், எழுத்தாளர்கள் பங்கேற்கிறார்கள்.
மாநாட்டிற்கான அனைத்து ஏற்பாடுகளும் சீரும் சிறப்புடன் நடைபெற்று வருகிறது என்று அவர் தெரிவித்தார்.