கோலாலம்பூர், ஜூலை 19 – பெரிக்காத்தான் நேஷனல் தேர்தல் தலைமை இயக்குநர் டத்தோஸ்ரீ முகமது சனுசி முகமது நோர் நேற்று அதிகாலை கைது செய்யப்பட்டதற்கு அவர் அரச மலேசிய போலீஸ்படையின் அழைப்புகளைப் புறக்கணித்ததே காரணமாகும்.
முகமது சனுசிக்கு எதிரான குற்றச்சாட்டுகள் தொடர்பில் சட்டத்துறைத் தலைவர் அலுவலகத்திடமிருந்து தங்களுக்கு உத்தரவு கிடைத்ததை அடுத்து அவரைத் தொலைபேசி வாயிலாக தொடர்பு கொள்வதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப் பட்டதாக தேசிய போலீஸ் படைத் தலைவர் டான்ஸ்ரீ ரஸாருடின் ஹுசைன் தெரிவித்தார்.
முகமது சனுசி கெடாவில் இல்லை. மாறாக, தலைநகரில் உள்ள ஒரு தொலைக்காட்சி நிலையத்தில் இப்பதாக போலீசுக்கு தகவல் கிடைத்தது சோதனையில் அவர் அங்கும் இல்லை. அவரை நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு தெரிவிக்க நாங்கள் விடுத்த அழைப்புகளை அவர் நிராகரித்தார்.
அவரது அரசியல் செயலாளர் மற்றும் பிற அதிகாரிகள் மூலமாகவும் அவரை அழைத்தோம், ஆனால் அனைத்து அழைப்புகளும் நிராகரிக்கப்பட்டன என்று அவர் புக்கிட் அமானில் நடைபெற்ற சிறப்புச் செய்தியாளர் கூட்டத்தில் கூறினார்.
நிந்தனைச் சட்டத்தின் கீழ் விசாரிக்கப்பட்டதால் முகமது சனுசி கைது செய்யப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டார்.
மாட்சிமை தங்கிய மாமன்னர் அல்-சுல்தான் அப்துல்லா ரியாதுதீன் அல்-முஸ்தபா பில்லா ஷா மற்றும் சிலாங்கூர் சுல்தான் சுல்தான் ஷராபுதீன் இட்ரிஸ் ஷா அல்ஹாஜ் ஆகியோரை அவமதிக்கும் மற்றும் அவர்களுக்கு எதிராக வெறுப்புணர்வைத் தூண்டும் மனப்போக்கை சனுசி கொண்டிருந்தார் என்றும் ரஸாருடின் தெரிவித்தார்.