NATIONAL

சிலாங்கூரில் பக்கத்தான்-பாரிசான் கூட்டணி சார்பில் களம் காணும் 5 இந்திய வேட்பாளர்கள்

ஷா ஆலம், ஜூலை 24- அடுத்த மாதம் நடைபெற இருக்கும் சிலாங்கூர் மாநிலத் தேர்தலில் ஆளும் பக்கத்தான் ஹராப்பான் மற்றும் பாரிசான் நேஷனல் கூட்டணி சார்பில் ஐந்து இந்திய வேட்பாளர்கள் களம் காண்கின்றனர்.

இத்தேர்தலில் ஆளும் கட்சியின் சார்பில் பி.கே.ஆர். ஜசெக, அமானா, பாரிசான் நேஷனல் ஆகிய கட்சிகள் போட்டியிட்டாலும் பி.கே.ஆர். மற்றும் ஜசெக ஆகிய கட்சிகள் மட்டுமே இந்தியர்களை வேட்பாளர்களாக நிறுத்தியுள்ளன.

பி.கே.ஆர். சார்பில் டாக்டர் குணராஜ் ஜோர்ஜ் (தாமான் செந்தோசா) மற்றும் தீபன் சுப்பிரமணியம் ( புக்கிட் மெலாவத்தி) ஆகியோர் போட்டியிடும் வேளையில் ஜசெக சார்பில் ராஜீவ் ரிக்ஷியாகாரன் (புக்கிட் காசிங்), வீ.பாப்பாராய்டு (பந்திங்), பிரகாஷ் சாம்புநாதன் ( கோத்தா கெமுனிங்) ஆகியோருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

வரும் ஆகஸ்ட் 12ஆம் தேதி நடைபெற இருக்கும் இத்தேர்தலில் சிலாங்கூர் மாநிலத்தில் உள்ள 56 தொகுதிகளில் பக்கத்தான்-பாரிசான் அணியின் சார்பாக பிகேஆர் கட்சிக்கு 20 இடங்களும் ஜசெகவுக்கு 15 இடங்களும் அமானா கட்சிக்கு ஒன்பது இடங்களும் தேசிய முன்னணிக்கு 12 இடங்களும் ஒதுக்கப்பட்டுள்ளன.

தேசிய முன்னணியின் உறுப்புக் கட்சிகளான மஇகாவும் மசீச வும் தேர்தலில் போட்டியிடுவதில் இருந்து விலகிக் கொண்டதால் அந்த கூட்டணியை பிரதிநிதித்து  அம்னோ மட்டும் தனது வேட்பாளர்களை நிறுத்துகிறது.

இந்த தேர்தலில் பக்கத்தான்-பாரிசான் சார்பில் போட்டியிடும் இந்திய வேட்பாளர்களில்  டாக்டர் குணராஜ் மற்றும் ராஜிவ் ஆகிய இருவருக்கும் இரண்டாவது தவணையாக வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. பாப்பா ராய்டு, பிரகாஷ் சம்புநாதன் மற்றும் தீபன் சுப்பிரமணியம் ஆகியோர் முதன் முறையாக களம் காண்கின்றனர்.


Pengarang :